Friday, January 16, 2009


தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ ?!
-பாரதி
stolen from a friend's profile:)

Tuesday, May 01, 2007

செய்தி: தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மீனவர் கடற்புலியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர, இன்னும் சில மீனவர்கள் புலிகளால் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

என்றோ தமிழகத்திற்கு புரிந்திருக்க வேண்டிய உண்மை, இப்பொழுது வெளிவந்திருக்கிறது.இருப்பினும் அரசியல்வாதிகளால் அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காலம் காலமாக தமிழினமென்னும் மாயவலையினை பின்னி வந்தவர்களாயிற்றே!இச்செய்தியினை தமிழ்நாடு எடுத்துகொண்ட விதத்திலிருந்தே தெரியவேண்டும், நம்மவர்களின் இரட்டைவேடம்! ஏன்?இதற்கு முன்னர் மீனவர் சுடப்பட்ட போதல்லாம், மத்திய அரசினிடம் கேட்டுத்தான் கண்டனம் இயற்றினீர்களா? இலங்கை அரசு என்றபோதல்லாம் புலியாக பாய்ந்த தமிழினமும் தமிழ்ச்சட்டமன்றமும் கூட, புலிகள் என்றதும் ஆடாக பதுங்கிவிட்டதே? தமிழ் இனம், தமிழர் கலாச்சாரம் என்று பேசித்திரியும் அரசியல் வாதிகள், முதலில் எந்த தமிழனை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்யவேண்டும். ஆதரவோ, எதிர்ப்போ பாதிக்கப்படப் போவது நமது மீனவர்கள். அவர்களை காப்பதே நமது தலையாய கடமை.மற்ற விசுவாசங்களெல்லாம் இதற்கு பின்னர் என்று இருத்துவது நலம்.இனம், மொழி, மதம் போன்றவற்றால் மக்களை பிரித்துப்பார்க்கும் பொழுது எழும் அபாயம் இது எனப்புரிந்து திருந்தினால், தமிழ்நாட்டின் மக்களுக்கும் மீனவர்க்கும் விடிவுகாலம். ஆனால் எங்கே? ஓட்டிற்காக, இலங்கைக்கே கள்ளத்தோணியில் செல்லத்துணிந்தவர்களாயிற்றே நாம்!

Tuesday, April 24, 2007

செய்தி: உலகின் மொத்த துப்பாக்கிகளும் G8 எனப்படும் எட்டு முன்னேறிய நாடுகளில்தான் செய்யப்படுகின்றன.இவற்றில் ஜப்பான் மட்டுமே துப்பாக்கி விற்பனைகளை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளது.

கேள்விப்பட்ட பொழுது சிரிக்காமல் இருக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. இந்த சின்ன உலகப்பந்துக்குள் எவ்வளவு போலி வேடங்கள்? தனிமனித உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம், என்று எத்தனையோ பேச்சுக்கள் கேட்டு காதுகள் புளித்து போயாயிற்று.இக் கருத்துகளை எல்லாம் தமக்கே சொந்தமென கருதும் நாடுகளே இத்துப்பாக்கிகளையும் ஏற்றுமதி செய்கின்றன..இதில் மட்டும் மேற்சொன்ன தனிமனித உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் என்னவாயின என்று தெரியவில்லை. இது ஒருபக்கமிருக்கட்டும்..

இவற்றை காசு கொடுத்து வாங்கி சுதந்திரத்திற்காக போராடும்(அல்லது போராடுவதாக மார்தட்டும்) மூன்றாம் உலக தீவிரவாத அன்பரே! நீங்கள் கொடுக்கும் காசு முழுக்க முழுக்க நீங்கள் எதிரியாக கருதும் நாடுகளுக்கு போய் சேர்கின்றனவே! அது உமக்கு தெரிகிறதா? இல்லை நீரும் அவர்போல அச்சமயத்தில் மட்டும் கண்களை வேறுபுறம் திருப்பிக்கொள்விரா? அப்படி இருவரும் முகம் திருப்பிக் கொண்டீரானால், உங்களது போரினை என்னவென்று பெயரிட?

Wednesday, April 11, 2007

வியட்நாமின் சரித்திரத்தை படித்த பொழுது....

எங்கள் சுதந்திரம்...

கால தேவன் உறங்கிப் போன நாழி ஒன்றில்
காற்றின் கயிற்றினை பற்றி என்னுள் ஒருவன்
கீழிழுக்கும் பருமனை உதறித்தள்ளி மேலெழும்ப
உறக்கம் கலைந்து நடந்திடும் போர்தன்னை ரசிக்கலானேன்!

சரீரச்சிறையினை உடைத்தெறிந்த மகிழ்ச்சியில் நான்.
உடைத்து எழும்பியவனை பார்த்து ஏங்கியவண்ணம் இன்னொரு நான்.
இது எப்படி சாத்தியமென்று எண்ணியவாறு இன்னுமொரு நான்.
குழாயடிச்சண்டை போல ஒவ்வொருவனும் போட்டியிட்டான் - என்னுள்.

பன்பெரும் படைகளை வென்ற சோழனை போல
மேலெழும்பியவன் பிறனை வென்று கொக்கரிக்க,
நானும் ஆடை களைந்து, பருமன் தொலைத்து,
திரியினின்று வளரும் தீபம் போல அவனை தொடர்ந்தேன்..

புல்வெளியின் நீளமும் அகலமும் பரவி விரிந்து.
மேல் வந்த மேகத்தை விரைந்து சந்தித்து,
புதிதாய் பிறந்த மழைத்துளியுடன் சல்லாபம் செய்து
களைத்து போனதும் புவியை கண்டு விரைந்தோம்.

எம்மை கூண்டிலடைத்து, எங்கள் கிராமங்களை எறிய விட்டு,
சுதந்திர நாட்டை நிறுவியதாக மார்தட்டும் அன்பரே கேளும்!
பொழிந்த குண்டுமழையில் செவிடாய் போன உங்கள் காதுகளில்
சிறிதேனும் கேட்கும் திறனிருந்தால், கூர்தீட்டி கேளும்!

கொடுத்த கூலிக்கு யோசிக்கும் உம் நாட்டு வீணர்களுக்கு
எடுத்த அரிப்பை போக்க வளரும் செடியல்ல சுதந்திரம்.
வார்த்தைக்கு வார்த்தை வர்த்தகம் பேசும் உமது வாய்க்கு
ஒய்வில் அசை போட கிடைத்த வழிப்பண்டமல்ல சுதந்திரம்.

மனிதரை உடலாக எண்ணும், தசையின் அழிவை கண்டஞ்சும்
உங்களவர்க்கு புரிந்திட, ஒரு மரணமாவது வேண்டும்-எங்கள் சுதந்திரம்.
சரீரத்தின் ஆயுட்கைதியாக கருதும், விடும் மூச்சினை கைவிலங்காக அணியும்,
எங்களவரின் மரணத்தில், ஒரு துளியாவது விளங்கிடும்-எங்கள் சுதந்திரம்.

Saturday, December 16, 2006

அட்லாண்டிக் சமுத்திரமும் சில நினைவுச் சிதறல்களும்...



சென்ற வார விடுமுறையினையொட்டி மியாமி கடற்கரை சென்றிருந்த போது என்னுள் ஏற்பட்ட நினைவலைகளை ஒருச்சேர்த்து பதிவிலிட முயன்றிருக்கிறேன். என்னடா கவிஞர் வைரமுத்து பாணியில தடபுடலா ஆரம்பிக்கிறானே என்று நெறய எதிர்பார்த்துறாதீங்க. அது என்னன்னா, பார்கிற வேலை அப்படி..ஆரம்பத்துலயே அமர்க்களம் பண்ணி ஊர ஏமாத்தி, அயர்ந்த நேரம் பார்த்து தலையில மாவரச்சிட்டு தப்பிச்சிட வேண்டியது..இதுதான் மென்பொருள் என்று சொல்லக் கூடிய, இந்தியாவின் அறிவுப்புரட்சி என்று பலரும் பாராட்டுகின்ற software job இன் அடிப்படைப் பண்பு.:)** படிக்கின்ற அன்பர்கள் கவனத்திற்கு..விளம்பரங்களில் வருகின்ற மாதிரி முந்தைய வரியின் பின்னால் ** போட்டுள்ளேன். பொதுவா இந்த கார் விளம்பரங்களில் பார்த்தீர்களானால், இந்த குறிப்பிட்ட வாகனம் லிட்டருக்கு 25கி.மி ஓடும் என்று குறிப்பிட்டு பின்னாடியே இப்படி ஒரு ** போட்டு, கீழே கண்ணுக்கே தெரியாத எழுத்தில் 'under test conditions' என்று போடுவார்கள். அதுபோல நானும் ஒரு நிபந்தனைவிதியிட்டு இருக்கிறேன்.ஆகவே மேற்குறிப்பிடப்பட்ட கருத்தோடு ஒத்துப்போகாத யாரேனும் என்னிடம் விவாதம் புரிய வருமுன்னர், ஒருமுறை அவ்விதியினை படித்துவிட்டு வருமாறு வேண்டுகின்றேன்.



'கத ரொம்ப நல்லாயிருந்தது.ஆனா வாரம் ஒருமுறையாவது எழுது..உன்னோட சொந்த அனுபவங்களையும், எண்ணங்களையும் எழுதினேனா இன்னும் சிறப்பா இருக்கும்.(கதைகளிலும் அதத்தான் எழுதுறனு சந்தேகிக்கிறேன்!!)' அப்படினு ஒரு நண்பன் (உன்னதாண்டா ....) கடிதமெழுதியிருந்தான்.முதல்ல அவனுக்கும், பதிவுகளை படித்துவிட்டு கடிதமெழுதியவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இனி வாரமொரு தடவை எழுதலாமென்று உத்தேசித்துள்ளேன்.(அப்படின்னா கட்சி காரியகமிட்டி மீட்டிங்கில் முடிவு பண்ணியாயிடுச்சினு அர்த்தமுங்க.ஆனா நடமுறைக்கு எப்ப வரும்னு கேட்டுறாதீங்க..எனக்கு பொல்லாத கோவம் வரும்..) அப்புறம் கதைகளிலும், கவிதைகளிலும் நான் எழுதுவது என்னுடைய அனுபவங்கள் அல்ல.அவ்வளவு சுவாரசியமான நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நிகழ்வதுமில்லை.பிறர் வாழ்விலும் நிகழ்வதில்லை என்று சந்தேகிக்கிறேன். ஆனா அவைகள் முழுக்க முழுக்க கற்பனையுமல்ல.வாழ்வில் நம்மை பாதித்த சில நிகழ்வுகளின் பிரதிபலிப்பு, சில எண்ணங்களின் சாரல், இவையெல்லாம் கலந்து எழுதுகின்றேன்.

சரி..அட்லாண்டிக் கடற்கரைக்கு செல்வோமா?

1)இதோ....அட்லாண்டிக் மகா சமுத்திரம்.எனது கனவுகளில் மிக முக்கியமானதாக கருதும் பிரயாணக்கனவுகளில் அட்லாண்டிக் கடலில் கால் நனைப்பது என்பது மிகவும் பிரதானமானது.அப்படி என்ன அட்லாண்டிக் கடலில் என்கிறீர்களா? சரித்திரத்தை புரட்டி பார்த்தீர்களானால் நமது மனித சமுதாயம் தவழத்தொடங்கியிருந்த காலத்தில் எடுத்து வைத்த மிகப்பெரிய அடி இந்த மகாச்சமுத்திரத்தை கடந்தது.சரிவர வரைபடங்கள் இல்லாத, கண்தெரியாத ஆபத்துகளும், மரணங்களும் நிறைந்த அக்காலத்தில் இச் சமுத்திரத்தை கடக்க முயற்சிப்பதென்றால் எவ்வளவு நம்பிக்கை தேவைப்பட்டிருக்கும்? எத்தகைய பயங்களை வெல்ல வேண்டி இருக்கும்? எத்துணை நிந்தனைகளையும் கேலிப்பேச்சுக்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்? இவற்றை எல்லாம் துச்சமென கருதி கப்பலேறி பல வீரச்செயல்கள் புரிந்தார்களே நமது முன்னோர்கள், அவர்களின் வழி வந்ததாக எண்ணும் பொழுது தேகம் பெருமையில் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. அத்தோடு ஒரு வித விவரிக்க முடியாத ஏக்கமும் கூட.பல நாட்கள் வெளிப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்தாலும், பிறந்த ஊரை தொலைக்காட்சியிலோ வலையிலோ பார்க்கையில் உள்ளே தோன்றுமே..அது போல.. அலைஅலையாக பொங்கி எழுந்து கரையோடு மோதி கடல் எழுப்பும் ஓங்காரக்குரல், புகமுடியாத ஒரு இருள்பிரதேசத்தில் நாம் தொலைத்துவிட்டு வந்த சொர்க்கபூமியை நினைவுறுத்திச் சென்றது. மிருகக்காட்சி சாலையில் வாழும் மிருகங்கள் போல பல கட்டுகளில் சிக்குண்டு, பொற்கூண்டுகளையும் விலங்குகளையும் சுகமாக எண்ணி வாழும் இன்றைய காலகட்டத்தில், சுதந்திரமாக கப்பல்களில் பறவைகள் போல சுற்றித்திரிந்த காலங்கள் முள்வேலி போல இதயத்தை நெருடி ஏங்க வைப்பதில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

2)கடற்கரையில் இருக்கும் மனிதர்களை பார்க்கின்றேன். உலகில் இருக்கும் எல்லா இனங்களிலிருந்தும் எல்லா நிறங்களிலும் மக்கள்.உடனே நண்பனின் குரல் நினைவிற்கு வருகின்றது.' தமிழர்கள் மற்ற இனங்களை விட விவேகமுடையவர்கள். கருப்பர்களில் இரண்டு வகை.ஒன்று மிக நல்லவர்கள்.இல்லாவிடில் மிகவும் கெட்டவர்கள்.யூதர்கள் மிகவும் தந்திரமானவர்கள். இசுலாமியர்கள் அப்படிப்பட்டவர்கள்.பார்சிகள் இப்படிப்பட்டவர்கள்.' மிகவும் தெரிந்தவனைப் போல இப்படியாக பல அவனது மொழியில் கூறினோமானால் 'வெவரமான' கருத்துகளை அடுக்கிக் கொண்டே போனான். அப்பொழுதும் இப்பொழுதைப் போலவே எனக்கு சிரிப்புதான் வந்தது. எவ்வளவு எளிதாக வருகின்றது இந்த இனப்பாகுபாடு.வளரும் முறைகளும் சுற்றுப்புறமும் செதுக்கும் ஒரு சிலை போன்றவனே மனிதன் என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா? இனங்களும் மதங்களும் விரிக்கும் மாயவலையில் தெரிந்தே போய் வீழ்கின்ற கூட்டத்தினை என்னவென்று சொல்ல? நமக்குள் இவ்வளவு ஓட்டைகளை வைத்துக் கொண்டு மேற்கத்திய நாகரிகம் பாகுபாடு பார்க்கின்றது என்று தயவு செய்து குற்றம் சாட்டாதீர்கள்..

3)மீண்டும் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் மனிதரை பார்க்கின்றேன். முக்கியமாக பெண்களை. நீச்சலுடைகளில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த பெண்களை ரசித்தேன்..ஆம்..பெண்களின் வடிவழகு என்னை கவர்கின்றது.இது ஒரு இயற்கையான உணர்வு.ஆண்களின் மரபணுவில் முதன் முதலாவதாக எழுதப்பட்ட தன்மையாக இந்த ஈர்ப்புத்தன்மை இருக்கும் என்று நினைக்கின்றேன்.ஆனால் இதனை ஏற்றுக் கொள்வதில் எவ்வளவு தயக்கம்? எவ்வளவு வெட்கம்?குறிப்பாக இந்திய நாட்டின் திருமகன்களுக்கு இந்த ஈர்ப்புணர்வு புரிபடுவதே இல்லை என்று சந்தேகிக்கின்றேன். இல்லை புரிபட்டாலும் அதனை ஒரு வெட்கப்படவேண்டிய நிலையாகவே கருதுகின்றனர். போதாக்குறைக்கு அதில் கேலிப்பேச்சுகளும் வேடிக்கைகளும் வேறு. நமது இந்த நிலை தான் வெட்கி தலைகுனியவேண்டியது , ஈர்ப்புணர்வு அல்ல என்பது எப்பொழுது வெளிச்சத்திற்கு வரும்??

4)கடைசியாக,..நிலவொளி திகழும் அழகிய இரவினில் கடற்கரையில் அமர்ந்து பாரதி, தாகூர்,ஷெல்லி, பைரோன் போன்றவர்களின் கவிதைகளை படிக்க வேண்டும் என்கின்ற எனது நீண்ட நாள் கனவு என்று நிறைவேறும் என்று ஒரு ஏக்கம்.அன்றாட வாழ்க்கைச்சக்கரம் சீராக செல்ல, கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து வேறு வழி தோன்றாத காரணத்தால் இருக்கின்ற வழியில் வாழ முயன்று, அதனால் உருவாகும் பல கட்டுக்களையும் ஏற்று, நமது இயற்கையான இயல்பு நமக்கே மறந்து,வாழ்ந்து கழிக்கின்றோம்.ஏனிந்த நிலை? ஏன் இப்படி ஆகினோம்? நமக்கு பிடித்தமான செயல்களை மட்டும் செய்து ஏன் வாழ முடியவில்லை? எனக்கு தெரிந்து எனது நண்பர்களில் கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் என்று பல முகங்களை பார்க்கின்றேன்.ஆனால் சீவிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்காக நாங்கள் செய்யும் வேலைகளோடு அடையாளப்படுத்தப்பட்டு போனோம். எமக்கு இயல்பாக வருகின்ற திறமைகளை கொண்டு பிழைப்பதற்கு வழி செய்யாத சமுகம், என்ன உயரமான நாகரிமாகவே இருந்தாலும் என்ன பிரயோசனம்? இவ்வளவு முன்னேற்றங்கள் நிகழ்ந்துதான் என்ன பயன்?

Sunday, November 12, 2006


ஒரு நாளாகவேனும்

உலகில் உள்ள நூறு கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் சிறுவர் சிறுமியரில் ஒரு சிறுவனும் சிறுமியும் அன்று அந்த மலையடிவாரத்திலுள்ள பாறை ஒன்றின் மேல் வானத்தை பார்த்தபடி படுத்திருந்தனர்.

"டேய் கண்ணா! வானம்னா என்னடா? அதுல என்ன இருக்கும்?"

கேட்ட இரட்டை சடை வாண்டின் பெயர் கமலா. கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு சென்றே தீருவேனென்று அடம்பிடித்து உண்ணாவிரதமிருந்து இன்னும் என்னென்னமோ போராட்டங்கள் நடத்தி தந்தையிடம் புரட்சிதலைவி என்ற பட்டப்பெயரும் வாங்கி இங்கு வந்து வானம் பற்றி அதிமுக்கிய ஆராய்ச்சி நடத்துகின்றாள்.

பாட்டி வீடும், அந்த கிராமமும் அவளுக்கு மிகவும் பிடித்தமென்றாலும், அங்கே வருவதற்கு அவளுக்கு இருந்த மிகமுக்கிய காரணம், கண்ணன்.வயதான பிறகு நாம் பாராட்டும் நட்புகளில் பலவகை உண்டு. அலுவலக நட்பு, அரட்டை நட்பு, காதலுக்கு முந்தைய நட்பு, சில நேரங்களில் பணத்தேவைக்காக கூட நட்பு பாராட்டுகின்றோம். ஆனால் சிறுவர்சிறுமியர் அறிந்தது ஒரே ஒரு நட்பு. அது தன் நண்பரை தன்னுடைய இன்னோரு உயிராக கருதுவது. கண்ணனையும் கமலாவையும் கோடைகால விடுமுறை நண்பர்கள் என்று கூறலாம். இருவரது தாத்தா பாட்டியும் ஒரே ஊரில் வாழ்ந்து வந்ததாலும், இருவருக்கும் அக்கிராமமும் அதனருகே இருந்த மலையும் மிகவும் பிடித்தமென்பதாலும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இருவரும் சிறுவராக இருந்ததினாலும், காந்தத்தினை கண்ட இரும்பை போல் இயற்கையாகவே ஈர்க்கப்பட்டு நெருங்கிய நண்பராயினர்.

"வானம் வந்து சாமியோட குட. நம்மளயெல்லாம் காப்பாத்துறதுக்காக சாமி குட பிடிச்சு நிக்கார்."

இது நமது கண்ணன். கண்ணனுடைய தந்தை சிறுவயதிலிருந்தே இறைபக்தியில் திளைத்து இந்துமதக்கொள்கையினில் சிறிதும் பிறளாமல் தம்மைப் போலவே பிற உயிர்களையும் நேசித்து வாழ்பவர்.தாய்மீனைப் பார்த்து நீஞ்சக் கற்றுக்கொள்ளும் மீன்குட்டி போல கண்ணனும் பக்திவழியே சென்றுகொண்டிருந்தான்.

கலகலவென்று சிரித்தாள் கமலா.

"மழ பெய்யும்போது சாமி குடய மடக்கி வச்சிடுமா? இல்ல சாமி குட ல அவ்வளோ ஓட்டை இருக்கா?"

கமலாவின் தந்தை கல்லூரி பேராசிரியர்.நாட்டின் பகுத்தறிவு இயக்கத்தின் முக்கிய தூண். நாத்திகம் அதனால் கமலாவிற்கு இயற்கையாகவே வந்தது.


"இப்படிலாம் பேசுனா சாமி கண்ண குத்திடும்.",என்றவாறே கன்னத்தில் போட்டுக்கொண்டான் கண்ணன்.

"நம்மளயெல்லாம் காப்பாத்துறதுக்குத்தான் சாமி இருக்கார்னு சொன்ன?இப்ப சாமி கண்ண குத்திடும்னு சொல்ற? "


கமலா கேட்டது கண்ணனுக்கு பயத்தை அளித்தாலும், உள்ளூர அவளது அறிவினை ரசித்தான்.பின்பு ஒரு இரவுக்காலம், தெரு விளக்கின் அடியில் அக்கிராமச்சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி ஆடினார்கள் இருவரும்.

"என்னமா ஓடுறான்டா ராமு.புடிக்கவே முடியல்ல."


"இதெல்லாம் என்ன பெரிசு.எங்க ஸ்கூலில் நாங்க கண்ணாமூச்சி ஆடறப்போ முதல்மாடியிலிருந்து கீழே குதிச்சு பக்கத்து மரத்துல ஏறி ஓளிவேன்."

"அப்படியாடா?முதல்மாடில இருந்து கீழே குதிச்சா அடிபடாதா?"


அவன் பொய் சொல்கிறான் என்று அவளுக்கும் தெரியும்.ஆனால் ஏனோ அவளுக்கு அது நிரம்ப பிடித்திருந்தது.கோடைக்காலமானது இப்படியாக அவர்களின் மொட்டுவிட்டு மலர ஆரம்பித்த மனங்களின் கொள்கை விவாதமாகவும்,பல புதிய விசனங்களை கற்றுக்கொள்வதிலும் கழிந்தது.


வருடங்களுக்கு வயதாயிற்று.மீண்டும் ஒரு கோடைக்காலம் வந்தது.கூடவே கமலாவும் கண்ணனும்.அதே பாறை முகட்டில் அமர்ந்திருந்தனர் இருவரும். ஆனால் இந்தமுறை இன்னொரு விருந்தாளியாக மௌனமும் வந்தமர்ந்திருந்தது.

"ஏண்டா கண்ணா அமைதியா உக்கார்ந்திருக்க?"

"ஓண்ணுமில்ல கமலா." என்ற கண்ணனை ஆழமாக பார்த்தாள்.

"யார லவ் பண்ற நீ?"


கமலாவை அதிர்ந்து போய் பார்த்தான் கண்ணன்.

"உனக்கு எப்படி தெரிஞ்சுது?"

"இது தெரியாதாடா? எங்க கிளாஸ்லயும் கொஞ்ச பசங்க உன்ன மாதிரிதான் கிறுக்கா சுத்திட்டு இருக்காங்க."

என்ற கமலாவை கல்லேறிந்தவாறே விரட்டி ஓடினான் கண்ணன்.பின்னர்,அன்று இரவு தெருவிளக்கினோரம் அமர்ந்து பறவைகளின் ஒலிகளை கேட்டுக் கொண்டிருக்கையில் மெதுவாக கூறினான்.

"அவ பேரு மீனா.எங்கிளாஸ்ல படிக்கிறா."

முறுவலித்தாள் கமலா.


"ஏண்டா?"

"ஏண்டான்னா?"

"ஏன் லவ் பண்ற அவள?"


"ம்ம்ம்..தெரில..அவ அழகா இருப்பா.ரொம்ப நல்லா படிப்பா.நேத்து கூட கனவுல வந்தா தெரியுமா?"

"கனவுல வந்தாளா? எப்படி வந்தா?"

வெட்கத்தில் கன்னம் சிவக்க சொன்னான் கண்ணன்.

"அது எங்க கல்யாண மேடை.நானும் அவளும் கைய பிடிச்சு நெருப்ப சுத்தி வாறோம்."

மீண்டும் அவன் பொய் சொன்னான்.ஆனால் இந்த முறை அவளுக்குத் தெரியவில்லை.

"சூப்பர்!!அதுக்குள்ள கல்யாண கனவா?சொல்லிட்டியா அவகிட்ட?"

"இல்ல.சொல்லல.பயமா இருக்கு!!"

"கமலா!சாப்பாடு ரெடி..கண்ணனையும் கூட்டிட்டு வா!சாப்பிடலாம்.!! ".அம்மாவின் சத்தம் கேட்டது..

"இந்தா வந்துட்டேன்மா.கண்ணா! வாடா சாப்பிடலாம்.."

வீட்டிற்குள் வந்து அமர்ந்தார்கள் இருவரும்.சாப்பிட்டு முடித்தவுடன்..


"மா! கண்ணன் லவ் பண்றானாம்மா!" கண்களில் குறும்பு கொப்பளிக்க உரக்கச் சொல்லினாள் கமலா.தூக்கிவாறிப் போட்டது கண்ணனுக்கு.இந்த உலகம் பிளந்து தன்னை முழுங்கிவிடாதா என்று கண்ணன் எண்ணிக்கொண்டிருக்கையில்..

"என்னடா கண்ணா! இந்த வயதிலேயே லவ்வா!"

"இல்ல ஆண்ட்டி!சும்மா,விளையாட்டுக்கு சொல்றா! அம்மா தேடுவாங்க.நான் வர்றேன் ஆண்ட்டி.கமலா! நாளக்கி பாக்கலாம்."

தப்பி ஓடினான் கண்ணன்.


"என்னடி லூசுக்கழுத.அவன் உன்கிட்ட நம்பிக்கையா ஒரு ரகசியம் சொன்னா இப்படித்தான் போட்டு ஓடக்கிறதா? என்ன நெனப்பான் உன்ன பத்தி!"

"ஓன்னும் நெனக்க மாட்டான்மா.நம்ம கண்ணந்தானேம்மா!ஆனா எப்படி ஓடினான் பாத்தியா?"

கல கலவென்று சிரித்தாலும் மனது ஏனோ வலித்தது நம் கமலாவிற்கு.

இரவு அப்பாவின் மடியில் அமர்ந்து சாய்வு நாற்காலியில் ஆடும்பொழுது மெதுவாக கேட்டாள்.

"அப்பா! நான் கறுப்பா பா?"


"சீ....இல்லடி செல்லம்!நீ......"ஆரம்பித்த அம்மாவினை தடுத்து நிறுத்தியது அப்பாவின் குரல்.

"ஆமாடா தங்கம்.நீ கறுப்பு..அழகான கறுப்பு.."

"கறுப்பு எப்படிப்பா அழகாகும்?"

"ஏன்? அழகுன்னா என்னடா?"

"அழகுன்னா எல்லொருக்கும் பிடிச்சிருக்கும்.அதான் அழகு. அரவிந்சாமி மாதிரி!!"

"அப்ப எல்லொருக்கும் ரஜினிகாந்த பிடிக்காதா?"

"ரஜினிகாந்தயும் பிடிக்கும்!! "

அப்பாவிடம் கமலாவிற்கு பிடித்தது இதுதான். தனது கருத்தை வெளிப்படையாக கூறமாட்டார்.அனால் கேள்விகள்,பதில்கள் மூலம் தான் கூற வந்ததை விளக்கிவிடுவார்.

"தோலின் வர்ணம்தான் அழகாடா?"

மீண்டும் அப்பா தொடர்ந்தார்.

"இல்லப்பா. ஆனா..".பதிலளிக்க முடியாமல் திக்கினாள் கமலா..

"ஆனா?"

"எல்லொருக்கும் செவப்புதாம்ப்பா பிடிக்குது.அம்மாகூட அந்த கல்யாணத்துல பொண்ணு நல்லா செவப்பா இருக்கானு தான சொன்னா?" குரல் கம்மச் சொன்னாள் கமலா.

"பூமி உருண்டையா தட்டையா டா?"

"உருண்டைப்பா. " எதற்காக கேட்கிறாரென்று தெரியாவிட்டாலும் பேச்சின் சூடு குறையாமலிருக்க உடனடியாக கூறினாள்.

"நீ இந்த பதில முன்னூறு வருசத்துக்கு முன்னாடி இங்கிலாந்துல சொல்லியிருந்தீன்னா உன்ன தெருவில் கம்பத்தில் கட்டி எறிச்சிருப்பாங்க!"

சட்டென்று புரிந்தது கமலாவிற்கு.ஆனாலும் பேச்சை வளர்ப்பதற்காக கேட்டாள்..

"அப்ப செகப்புதான் அழகுன்றது உண்மையில்லையாப்பா?"

"வெள்ளக்காரங்க இந்தியா வந்தப்ப கருப்பா இருக்கிற இந்தியர்கள ஆள்வது கடவுள் வெள்ளயர்களுக்கு கொடுத்த சும னு சொல்லி ஆண்டாங்க.அவங்கள வாயப்பிளந்து பாத்துட்டு இருந்ததால இன்ன வரக்கும் நாமும் அதயே உண்மைனு நம்பி வாழ்ந்து வாரோம்."

அப்பா கூறியது புரியாவிட்டாலும் மனதுக்கு இதமாக இருந்தது கமலாவிற்கு.நாளை கண்ணனிடம் இதனை விவாதிக்க வேண்டும் என முடிவு செய்துகொண்டாள்.

வருடங்கள் மீண்டும் ஓடின...வளர்ந்துவிட்ட காரணத்தினால், கிராமத்தின் மண்வாசனையும், மலைக்குன்றுகளும் இருவரையும் ஈர்க்கத்தவறின.

கண்ணனின் வாழ்க்கையில் முதல் காதல் தோல்வியுற்று அவனை துக்கத்திலாழ்த்தியது..இரண்டாம் காதல் வெற்றி பெற்று மிகவும் துக்கத்திலாழ்த்தியது.

கமலாவோ புத்தகங்களோடு வாழ்ந்தாள்.புதிது புதிதாக நிரம்ப கற்றுக்கொண்டாள்.பள்ளியிறுதித்தேர்வில் மாவட்டத்தில் முதலாவதாக வந்தாள். என்ன செய்யப் போகிறாய் என்று தந்தை கேட்டபொழுது சற்றும் யோசிக்காமல் பதிலளித்தாள்.

"மருத்துவம் பயிலப் போகிறேன்!"

"மிக்க நல்லது. நீ இங்கு பயில்வதைவிட அமெரிக்காவிற்கு போ. அங்கு நிரயக் கற்றுக்கொள்வாய்.."என்றார் அப்பா.

அமெரிக்கா செல்லுமுன்னர் விடைபெற்றுக்கொள்ள பாட்டி வீட்டிற்கு வந்தாள். விதியென்று கூறலாம்.இல்லை எதிர்பாராத இனிய நிகழ்வு என்றும் கூறலாம்.எவ்வாறாக எடுத்துக்கொண்டாலும் கமலாவிற்கு மிக்க மகிழ்ச்சி தந்தது அங்கே கண்ணனுடைய வரவு.இருவரும் வீட்டு முகப்பில் அமர்ந்திருந்தனர்.சொல்வதற்கும் கேட்பதற்கும் நிரம்ப இருந்தாலும், ஏனோ அந்நியப்பட்டுப் போகினர்.

கண்ணன் அப்பொழுது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். நகர வாழ்க்கையினாலும் கல்லூரிவாசமும் நிரம்ப கற்றுக் கொடுத்திருந்தன.தன்னைப்பற்றியும் உலகைப் பற்றியும் தெரிந்துகொள்ளத்துவங்கும் பருவத்தில் இருந்ததனால் மிகவும் அமைதியாக மாறி இருந்தான்.

மௌனம் போர்க்கொடி கட்டி சண்டைபிடிக்க துவங்கியது.அசௌகரியமாக உணர்ந்தனர். எங்கோ அலைமோதிக் கொண்டிருந்த கண்கள் மோதுகையில் கஷ்டப்பட்டு முறுவலித்தனர். கமலா தான் அந்நிலையை உடைத்தாள்.

"நகர வாழ்க்கை எப்படிடா இருக்கு கண்ணா?"

"நல்லாருக்கு கமலா.ரொம்ப வித்தியாசமா இருக்கு."

"லீவ் நாள்ல என்ன பண்ணுவ?"


"எங்கயாவது வெளில பார்கு,பீச்சு னு எல்லாரும் சேர்ந்து போவோம்.."

"எல்லாரும்னா?"

"எல்லாரும்னா கூட படிக்கிறவங்க எல்லாரும்.."

"பொண்ணுங்களுமா?"

"ஆமா!பொண்ணுங்களுந்தான்.!ஏன் கேட்குற?"

"இல்ல.சும்மாத்தான்!!"

இன்னும் பல சம்பந்தமில்லாத விசனங்கள் பேசி சிரித்தனர்..

"கிளம்புறேன் கண்ணா!" அவனை ஆழமாக பார்த்தாள்!

"சரி கமலா! நல்லா படி..முடிஞ்சா லெட்டர் போடு..உடம்ப பார்த்துக்க!"

மீண்டும் நாட்கள் ஓடின.முடிவாக அந்த நாள் வந்தது..அன்று கண்ணன் கல்லூரி விடுதியில் தொலைக்காட்சி அறையில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தான்.

"இன்னக்கி கமலா பிளைட் ஏறி இருப்பா.என்ன நினைச்சிட்டிருப்பா? பயப்படுவாளோ?சே சே!கமலாவாது பயப்படுவதாது?"

முக்கிய செய்தி!!அமெரிக்கா செல்லும் விமானம் இன்று இயந்திரக்கோளாறினால் வெடித்துச் சிதறியது. பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருப்பர் என்று அஞ்சப்படுகின்றது.

நினைவுக்குதிரையில் பறந்து கொண்டிருந்த கண்ணனை சொடுக்கென்று லகான் இழுக்கப்பட்டு நிறுத்தியது தொலைக்காட்சியில் வந்த செய்தி.மனதில் நூறு விமானங்கள் வெடித்துச் சிதறின.வெடித்த சிதறல்களெல்லாம் கண்ணாடித்துண்டுகளாக மாறின. அக் கண்ணாடித்துகள்கள் ஒவ்வொன்றிலும் கமலாவின் முகம் சிரித்தது..

அவசரம் அவசரமாக கமலாவின் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

"அங்கிள்! கமலா!.........."

"ம்ம்ம்............."

விம்மல் சத்தம் கேட்டது பின்னணியில்.ஆண்ட்டியாக இருக்கும்...

வலி,துக்கம், அழுகை எல்லாவற்றிற்கும் கண்ணன் உணர்வற்று, மரத்துப் போனான்.தன்னில் ஒரு முக்கியபகுதி அமைதியாக இறந்து போக கண்டான். அது போல் இன்னுமொரு பகுதி எங்கிருந்தோ தன்னில் வந்து அமர்ந்ததையும் உணர்ந்தான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக..தனித்துப் போனான்..ஓட்டினுள் ஒடுங்கும் ஆமை போல் மேலும் மேலும் தனக்குள்ளே ஒடுங்கிப் போனான்..

காலம் மீண்டும் சுழன்றது.கூடவே நமது கண்ணனும். நல்ல வேலையில் அமர்ந்தான். திரைகடலோடி திறை தேடினான். சமுகத்தின் பார்வையில் உயர்ந்தான். எங்கு சென்றாலும் மனிதர் சூழ்ந்தனர்.அவனின் நட்பு நாடினர். காதல்களும் தேடி வந்தன. ஆயினும்..நட்பு காட்டி பல்லிளித்த விகாரங்களை அடையாளம் கண்ட பொழுதும், பொய்யான காதல்களால் புண்பட்ட பொழுதும், உண்மையான உறவுகளுக்கு ஏங்கிய ஒவ்வொரு நொடியின் பொழுதும்....இழந்த இழப்பின் பரிமாணம் அவனை தாக்கியது. அன்றில் பறவையாக உணர்ந்தான். உயிரை மாய்த்துக் கொள்ளவோ அவனது பகுத்தறிவு இடம் தரவில்லை. அவனது நிலைக்கு அவனே தீர்வும் கண்டான். வாழும் வாழ்க்கையினை பிறப்பினால் ஏற்பட்ட கடமையாக எண்ணி வாழ முற்பட்டான். வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், மனிதர்கள் எதுவும் அவனை பாதிக்கவில்லை. ரயிலின் ஜன்னல் வழியே காட்சிகளை பார்த்து செல்லும் தனியான பயணி போல் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் ஓட்டாமல் மிதந்து சென்றான்.

"ஒரு நாளாகவேனும், ஒரு நொடியாகவேனும்..கமலாவை பார்க்க வேண்டும். இவ்வுலகை பற்றி நான் அறிந்ததெல்லாம் கூற வேண்டும்.என்னுள்ளே நான் புதைத்து வைத்த ரகசியங்களை, எனது வலிகளை,எனது அவமானங்களை அவளிடம் உரைக்க வேண்டும்.பின்னர் அவளுடனே அவளிருக்கும் உலகிற்கு சென்றுவிட வேண்டும்.."


இதுவே அவனது தீராத வேட்கையாயிருந்தது.மீண்டும் காலங்கள் ஓடின.கண்ணனிற்கு திருமணமாயிற்று. திருமணமாகிய முதல்நாள் இரவு அவனும் அவனது மனைவியும் ஒரு பெண்குழந்தையை தத்தெடுக்க வேண்டுமென்று முடிவுசெய்தனர். அதற்கான வழிமுறைகளை ஆலோசனை செய்த பொழுது அவன் மனைவி கேட்டாள்.

"குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?"

கண்ணன் தீர்க்கமாக பதிலளித்தான்.

"கமலா...."

முற்றும்..


Thursday, November 02, 2006

சொல்லடி சிவசக்தி!

பிணங்களை உண்டு வாழும் நரிக்கூட்டம் நடுவில் வாழ்கையில்,

நானும் பிணமாகமாட்டேனோ என்றெண்ணத் தோணுதடி!!

பொய்மையும் பசப்பும் நிறைந்த மாக்கள் கூட்டம் காண்கையில்,

குருடாகவேனும் வாழ நின்னிடம் மன்றாடத் தோணுதடி!!

பகுத்தறியென்றால் வெறுத்தோட்டங் காணும் ஆட்டுமந்தையில்,

இன்னுமொர் ஆடாகிப் போவேனோ என்றஞ்சத் தோணுதடி!!

சார்ந்தோரின் சாம்புதற்கிணங்கி துணைதேடி நிற்கையில்

மாண்ட காதல் பலவும் மனதில் வந்தோடுதடி!!

நின்னையொத்த பாவைதனை திசையெங்கும் தேடுகையில்

காணாமல் தோற்றேமாந்தது எந்தன் பிழையோடி!!

தூய்மையான காதலென நினைத்தது பொய்யாகக் காணுகையில்

வேற்கம்பினால் பிளந்தது போல் நெஞ்சு துடிக்குதடி!

நட்பினில் நேர்மையானது வழக்கொழிந்தே போகையில்

மனம் படும் பாட்டினை நீ அறிவாயோடி!!

ஊராரின் பிழைபலவற்றை மற்றவர் மறந்தே நிற்கையில்,

அவ்வாறியலாமல் நான் மட்டும் உழல்வதேனடி!!

மதமென்னும் புறைகட்டி மக்கள் பார்வையிழந்தே போகையில்,

அதம் செய்தே தர்மம் காத்திட நீ வருவாயோடி!!

முன்னேற்றங்கள் பல நிகழ்ந்தாலும் இன்னமும் சாதிச்சகதியில்

புரண்டே மகிழும் சமுகத்தை என்னதான் செய்வாயடி!!

சொல்லடி சிவசக்தி!

சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் நீ!!