Saturday, December 16, 2006

அட்லாண்டிக் சமுத்திரமும் சில நினைவுச் சிதறல்களும்...



சென்ற வார விடுமுறையினையொட்டி மியாமி கடற்கரை சென்றிருந்த போது என்னுள் ஏற்பட்ட நினைவலைகளை ஒருச்சேர்த்து பதிவிலிட முயன்றிருக்கிறேன். என்னடா கவிஞர் வைரமுத்து பாணியில தடபுடலா ஆரம்பிக்கிறானே என்று நெறய எதிர்பார்த்துறாதீங்க. அது என்னன்னா, பார்கிற வேலை அப்படி..ஆரம்பத்துலயே அமர்க்களம் பண்ணி ஊர ஏமாத்தி, அயர்ந்த நேரம் பார்த்து தலையில மாவரச்சிட்டு தப்பிச்சிட வேண்டியது..இதுதான் மென்பொருள் என்று சொல்லக் கூடிய, இந்தியாவின் அறிவுப்புரட்சி என்று பலரும் பாராட்டுகின்ற software job இன் அடிப்படைப் பண்பு.:)** படிக்கின்ற அன்பர்கள் கவனத்திற்கு..விளம்பரங்களில் வருகின்ற மாதிரி முந்தைய வரியின் பின்னால் ** போட்டுள்ளேன். பொதுவா இந்த கார் விளம்பரங்களில் பார்த்தீர்களானால், இந்த குறிப்பிட்ட வாகனம் லிட்டருக்கு 25கி.மி ஓடும் என்று குறிப்பிட்டு பின்னாடியே இப்படி ஒரு ** போட்டு, கீழே கண்ணுக்கே தெரியாத எழுத்தில் 'under test conditions' என்று போடுவார்கள். அதுபோல நானும் ஒரு நிபந்தனைவிதியிட்டு இருக்கிறேன்.ஆகவே மேற்குறிப்பிடப்பட்ட கருத்தோடு ஒத்துப்போகாத யாரேனும் என்னிடம் விவாதம் புரிய வருமுன்னர், ஒருமுறை அவ்விதியினை படித்துவிட்டு வருமாறு வேண்டுகின்றேன்.



'கத ரொம்ப நல்லாயிருந்தது.ஆனா வாரம் ஒருமுறையாவது எழுது..உன்னோட சொந்த அனுபவங்களையும், எண்ணங்களையும் எழுதினேனா இன்னும் சிறப்பா இருக்கும்.(கதைகளிலும் அதத்தான் எழுதுறனு சந்தேகிக்கிறேன்!!)' அப்படினு ஒரு நண்பன் (உன்னதாண்டா ....) கடிதமெழுதியிருந்தான்.முதல்ல அவனுக்கும், பதிவுகளை படித்துவிட்டு கடிதமெழுதியவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இனி வாரமொரு தடவை எழுதலாமென்று உத்தேசித்துள்ளேன்.(அப்படின்னா கட்சி காரியகமிட்டி மீட்டிங்கில் முடிவு பண்ணியாயிடுச்சினு அர்த்தமுங்க.ஆனா நடமுறைக்கு எப்ப வரும்னு கேட்டுறாதீங்க..எனக்கு பொல்லாத கோவம் வரும்..) அப்புறம் கதைகளிலும், கவிதைகளிலும் நான் எழுதுவது என்னுடைய அனுபவங்கள் அல்ல.அவ்வளவு சுவாரசியமான நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நிகழ்வதுமில்லை.பிறர் வாழ்விலும் நிகழ்வதில்லை என்று சந்தேகிக்கிறேன். ஆனா அவைகள் முழுக்க முழுக்க கற்பனையுமல்ல.வாழ்வில் நம்மை பாதித்த சில நிகழ்வுகளின் பிரதிபலிப்பு, சில எண்ணங்களின் சாரல், இவையெல்லாம் கலந்து எழுதுகின்றேன்.

சரி..அட்லாண்டிக் கடற்கரைக்கு செல்வோமா?

1)இதோ....அட்லாண்டிக் மகா சமுத்திரம்.எனது கனவுகளில் மிக முக்கியமானதாக கருதும் பிரயாணக்கனவுகளில் அட்லாண்டிக் கடலில் கால் நனைப்பது என்பது மிகவும் பிரதானமானது.அப்படி என்ன அட்லாண்டிக் கடலில் என்கிறீர்களா? சரித்திரத்தை புரட்டி பார்த்தீர்களானால் நமது மனித சமுதாயம் தவழத்தொடங்கியிருந்த காலத்தில் எடுத்து வைத்த மிகப்பெரிய அடி இந்த மகாச்சமுத்திரத்தை கடந்தது.சரிவர வரைபடங்கள் இல்லாத, கண்தெரியாத ஆபத்துகளும், மரணங்களும் நிறைந்த அக்காலத்தில் இச் சமுத்திரத்தை கடக்க முயற்சிப்பதென்றால் எவ்வளவு நம்பிக்கை தேவைப்பட்டிருக்கும்? எத்தகைய பயங்களை வெல்ல வேண்டி இருக்கும்? எத்துணை நிந்தனைகளையும் கேலிப்பேச்சுக்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்? இவற்றை எல்லாம் துச்சமென கருதி கப்பலேறி பல வீரச்செயல்கள் புரிந்தார்களே நமது முன்னோர்கள், அவர்களின் வழி வந்ததாக எண்ணும் பொழுது தேகம் பெருமையில் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. அத்தோடு ஒரு வித விவரிக்க முடியாத ஏக்கமும் கூட.பல நாட்கள் வெளிப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்தாலும், பிறந்த ஊரை தொலைக்காட்சியிலோ வலையிலோ பார்க்கையில் உள்ளே தோன்றுமே..அது போல.. அலைஅலையாக பொங்கி எழுந்து கரையோடு மோதி கடல் எழுப்பும் ஓங்காரக்குரல், புகமுடியாத ஒரு இருள்பிரதேசத்தில் நாம் தொலைத்துவிட்டு வந்த சொர்க்கபூமியை நினைவுறுத்திச் சென்றது. மிருகக்காட்சி சாலையில் வாழும் மிருகங்கள் போல பல கட்டுகளில் சிக்குண்டு, பொற்கூண்டுகளையும் விலங்குகளையும் சுகமாக எண்ணி வாழும் இன்றைய காலகட்டத்தில், சுதந்திரமாக கப்பல்களில் பறவைகள் போல சுற்றித்திரிந்த காலங்கள் முள்வேலி போல இதயத்தை நெருடி ஏங்க வைப்பதில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

2)கடற்கரையில் இருக்கும் மனிதர்களை பார்க்கின்றேன். உலகில் இருக்கும் எல்லா இனங்களிலிருந்தும் எல்லா நிறங்களிலும் மக்கள்.உடனே நண்பனின் குரல் நினைவிற்கு வருகின்றது.' தமிழர்கள் மற்ற இனங்களை விட விவேகமுடையவர்கள். கருப்பர்களில் இரண்டு வகை.ஒன்று மிக நல்லவர்கள்.இல்லாவிடில் மிகவும் கெட்டவர்கள்.யூதர்கள் மிகவும் தந்திரமானவர்கள். இசுலாமியர்கள் அப்படிப்பட்டவர்கள்.பார்சிகள் இப்படிப்பட்டவர்கள்.' மிகவும் தெரிந்தவனைப் போல இப்படியாக பல அவனது மொழியில் கூறினோமானால் 'வெவரமான' கருத்துகளை அடுக்கிக் கொண்டே போனான். அப்பொழுதும் இப்பொழுதைப் போலவே எனக்கு சிரிப்புதான் வந்தது. எவ்வளவு எளிதாக வருகின்றது இந்த இனப்பாகுபாடு.வளரும் முறைகளும் சுற்றுப்புறமும் செதுக்கும் ஒரு சிலை போன்றவனே மனிதன் என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா? இனங்களும் மதங்களும் விரிக்கும் மாயவலையில் தெரிந்தே போய் வீழ்கின்ற கூட்டத்தினை என்னவென்று சொல்ல? நமக்குள் இவ்வளவு ஓட்டைகளை வைத்துக் கொண்டு மேற்கத்திய நாகரிகம் பாகுபாடு பார்க்கின்றது என்று தயவு செய்து குற்றம் சாட்டாதீர்கள்..

3)மீண்டும் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் மனிதரை பார்க்கின்றேன். முக்கியமாக பெண்களை. நீச்சலுடைகளில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த பெண்களை ரசித்தேன்..ஆம்..பெண்களின் வடிவழகு என்னை கவர்கின்றது.இது ஒரு இயற்கையான உணர்வு.ஆண்களின் மரபணுவில் முதன் முதலாவதாக எழுதப்பட்ட தன்மையாக இந்த ஈர்ப்புத்தன்மை இருக்கும் என்று நினைக்கின்றேன்.ஆனால் இதனை ஏற்றுக் கொள்வதில் எவ்வளவு தயக்கம்? எவ்வளவு வெட்கம்?குறிப்பாக இந்திய நாட்டின் திருமகன்களுக்கு இந்த ஈர்ப்புணர்வு புரிபடுவதே இல்லை என்று சந்தேகிக்கின்றேன். இல்லை புரிபட்டாலும் அதனை ஒரு வெட்கப்படவேண்டிய நிலையாகவே கருதுகின்றனர். போதாக்குறைக்கு அதில் கேலிப்பேச்சுகளும் வேடிக்கைகளும் வேறு. நமது இந்த நிலை தான் வெட்கி தலைகுனியவேண்டியது , ஈர்ப்புணர்வு அல்ல என்பது எப்பொழுது வெளிச்சத்திற்கு வரும்??

4)கடைசியாக,..நிலவொளி திகழும் அழகிய இரவினில் கடற்கரையில் அமர்ந்து பாரதி, தாகூர்,ஷெல்லி, பைரோன் போன்றவர்களின் கவிதைகளை படிக்க வேண்டும் என்கின்ற எனது நீண்ட நாள் கனவு என்று நிறைவேறும் என்று ஒரு ஏக்கம்.அன்றாட வாழ்க்கைச்சக்கரம் சீராக செல்ல, கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து வேறு வழி தோன்றாத காரணத்தால் இருக்கின்ற வழியில் வாழ முயன்று, அதனால் உருவாகும் பல கட்டுக்களையும் ஏற்று, நமது இயற்கையான இயல்பு நமக்கே மறந்து,வாழ்ந்து கழிக்கின்றோம்.ஏனிந்த நிலை? ஏன் இப்படி ஆகினோம்? நமக்கு பிடித்தமான செயல்களை மட்டும் செய்து ஏன் வாழ முடியவில்லை? எனக்கு தெரிந்து எனது நண்பர்களில் கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் என்று பல முகங்களை பார்க்கின்றேன்.ஆனால் சீவிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்காக நாங்கள் செய்யும் வேலைகளோடு அடையாளப்படுத்தப்பட்டு போனோம். எமக்கு இயல்பாக வருகின்ற திறமைகளை கொண்டு பிழைப்பதற்கு வழி செய்யாத சமுகம், என்ன உயரமான நாகரிமாகவே இருந்தாலும் என்ன பிரயோசனம்? இவ்வளவு முன்னேற்றங்கள் நிகழ்ந்துதான் என்ன பயன்?

Sunday, November 12, 2006


ஒரு நாளாகவேனும்

உலகில் உள்ள நூறு கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் சிறுவர் சிறுமியரில் ஒரு சிறுவனும் சிறுமியும் அன்று அந்த மலையடிவாரத்திலுள்ள பாறை ஒன்றின் மேல் வானத்தை பார்த்தபடி படுத்திருந்தனர்.

"டேய் கண்ணா! வானம்னா என்னடா? அதுல என்ன இருக்கும்?"

கேட்ட இரட்டை சடை வாண்டின் பெயர் கமலா. கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு சென்றே தீருவேனென்று அடம்பிடித்து உண்ணாவிரதமிருந்து இன்னும் என்னென்னமோ போராட்டங்கள் நடத்தி தந்தையிடம் புரட்சிதலைவி என்ற பட்டப்பெயரும் வாங்கி இங்கு வந்து வானம் பற்றி அதிமுக்கிய ஆராய்ச்சி நடத்துகின்றாள்.

பாட்டி வீடும், அந்த கிராமமும் அவளுக்கு மிகவும் பிடித்தமென்றாலும், அங்கே வருவதற்கு அவளுக்கு இருந்த மிகமுக்கிய காரணம், கண்ணன்.வயதான பிறகு நாம் பாராட்டும் நட்புகளில் பலவகை உண்டு. அலுவலக நட்பு, அரட்டை நட்பு, காதலுக்கு முந்தைய நட்பு, சில நேரங்களில் பணத்தேவைக்காக கூட நட்பு பாராட்டுகின்றோம். ஆனால் சிறுவர்சிறுமியர் அறிந்தது ஒரே ஒரு நட்பு. அது தன் நண்பரை தன்னுடைய இன்னோரு உயிராக கருதுவது. கண்ணனையும் கமலாவையும் கோடைகால விடுமுறை நண்பர்கள் என்று கூறலாம். இருவரது தாத்தா பாட்டியும் ஒரே ஊரில் வாழ்ந்து வந்ததாலும், இருவருக்கும் அக்கிராமமும் அதனருகே இருந்த மலையும் மிகவும் பிடித்தமென்பதாலும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இருவரும் சிறுவராக இருந்ததினாலும், காந்தத்தினை கண்ட இரும்பை போல் இயற்கையாகவே ஈர்க்கப்பட்டு நெருங்கிய நண்பராயினர்.

"வானம் வந்து சாமியோட குட. நம்மளயெல்லாம் காப்பாத்துறதுக்காக சாமி குட பிடிச்சு நிக்கார்."

இது நமது கண்ணன். கண்ணனுடைய தந்தை சிறுவயதிலிருந்தே இறைபக்தியில் திளைத்து இந்துமதக்கொள்கையினில் சிறிதும் பிறளாமல் தம்மைப் போலவே பிற உயிர்களையும் நேசித்து வாழ்பவர்.தாய்மீனைப் பார்த்து நீஞ்சக் கற்றுக்கொள்ளும் மீன்குட்டி போல கண்ணனும் பக்திவழியே சென்றுகொண்டிருந்தான்.

கலகலவென்று சிரித்தாள் கமலா.

"மழ பெய்யும்போது சாமி குடய மடக்கி வச்சிடுமா? இல்ல சாமி குட ல அவ்வளோ ஓட்டை இருக்கா?"

கமலாவின் தந்தை கல்லூரி பேராசிரியர்.நாட்டின் பகுத்தறிவு இயக்கத்தின் முக்கிய தூண். நாத்திகம் அதனால் கமலாவிற்கு இயற்கையாகவே வந்தது.


"இப்படிலாம் பேசுனா சாமி கண்ண குத்திடும்.",என்றவாறே கன்னத்தில் போட்டுக்கொண்டான் கண்ணன்.

"நம்மளயெல்லாம் காப்பாத்துறதுக்குத்தான் சாமி இருக்கார்னு சொன்ன?இப்ப சாமி கண்ண குத்திடும்னு சொல்ற? "


கமலா கேட்டது கண்ணனுக்கு பயத்தை அளித்தாலும், உள்ளூர அவளது அறிவினை ரசித்தான்.பின்பு ஒரு இரவுக்காலம், தெரு விளக்கின் அடியில் அக்கிராமச்சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி ஆடினார்கள் இருவரும்.

"என்னமா ஓடுறான்டா ராமு.புடிக்கவே முடியல்ல."


"இதெல்லாம் என்ன பெரிசு.எங்க ஸ்கூலில் நாங்க கண்ணாமூச்சி ஆடறப்போ முதல்மாடியிலிருந்து கீழே குதிச்சு பக்கத்து மரத்துல ஏறி ஓளிவேன்."

"அப்படியாடா?முதல்மாடில இருந்து கீழே குதிச்சா அடிபடாதா?"


அவன் பொய் சொல்கிறான் என்று அவளுக்கும் தெரியும்.ஆனால் ஏனோ அவளுக்கு அது நிரம்ப பிடித்திருந்தது.கோடைக்காலமானது இப்படியாக அவர்களின் மொட்டுவிட்டு மலர ஆரம்பித்த மனங்களின் கொள்கை விவாதமாகவும்,பல புதிய விசனங்களை கற்றுக்கொள்வதிலும் கழிந்தது.


வருடங்களுக்கு வயதாயிற்று.மீண்டும் ஒரு கோடைக்காலம் வந்தது.கூடவே கமலாவும் கண்ணனும்.அதே பாறை முகட்டில் அமர்ந்திருந்தனர் இருவரும். ஆனால் இந்தமுறை இன்னொரு விருந்தாளியாக மௌனமும் வந்தமர்ந்திருந்தது.

"ஏண்டா கண்ணா அமைதியா உக்கார்ந்திருக்க?"

"ஓண்ணுமில்ல கமலா." என்ற கண்ணனை ஆழமாக பார்த்தாள்.

"யார லவ் பண்ற நீ?"


கமலாவை அதிர்ந்து போய் பார்த்தான் கண்ணன்.

"உனக்கு எப்படி தெரிஞ்சுது?"

"இது தெரியாதாடா? எங்க கிளாஸ்லயும் கொஞ்ச பசங்க உன்ன மாதிரிதான் கிறுக்கா சுத்திட்டு இருக்காங்க."

என்ற கமலாவை கல்லேறிந்தவாறே விரட்டி ஓடினான் கண்ணன்.பின்னர்,அன்று இரவு தெருவிளக்கினோரம் அமர்ந்து பறவைகளின் ஒலிகளை கேட்டுக் கொண்டிருக்கையில் மெதுவாக கூறினான்.

"அவ பேரு மீனா.எங்கிளாஸ்ல படிக்கிறா."

முறுவலித்தாள் கமலா.


"ஏண்டா?"

"ஏண்டான்னா?"

"ஏன் லவ் பண்ற அவள?"


"ம்ம்ம்..தெரில..அவ அழகா இருப்பா.ரொம்ப நல்லா படிப்பா.நேத்து கூட கனவுல வந்தா தெரியுமா?"

"கனவுல வந்தாளா? எப்படி வந்தா?"

வெட்கத்தில் கன்னம் சிவக்க சொன்னான் கண்ணன்.

"அது எங்க கல்யாண மேடை.நானும் அவளும் கைய பிடிச்சு நெருப்ப சுத்தி வாறோம்."

மீண்டும் அவன் பொய் சொன்னான்.ஆனால் இந்த முறை அவளுக்குத் தெரியவில்லை.

"சூப்பர்!!அதுக்குள்ள கல்யாண கனவா?சொல்லிட்டியா அவகிட்ட?"

"இல்ல.சொல்லல.பயமா இருக்கு!!"

"கமலா!சாப்பாடு ரெடி..கண்ணனையும் கூட்டிட்டு வா!சாப்பிடலாம்.!! ".அம்மாவின் சத்தம் கேட்டது..

"இந்தா வந்துட்டேன்மா.கண்ணா! வாடா சாப்பிடலாம்.."

வீட்டிற்குள் வந்து அமர்ந்தார்கள் இருவரும்.சாப்பிட்டு முடித்தவுடன்..


"மா! கண்ணன் லவ் பண்றானாம்மா!" கண்களில் குறும்பு கொப்பளிக்க உரக்கச் சொல்லினாள் கமலா.தூக்கிவாறிப் போட்டது கண்ணனுக்கு.இந்த உலகம் பிளந்து தன்னை முழுங்கிவிடாதா என்று கண்ணன் எண்ணிக்கொண்டிருக்கையில்..

"என்னடா கண்ணா! இந்த வயதிலேயே லவ்வா!"

"இல்ல ஆண்ட்டி!சும்மா,விளையாட்டுக்கு சொல்றா! அம்மா தேடுவாங்க.நான் வர்றேன் ஆண்ட்டி.கமலா! நாளக்கி பாக்கலாம்."

தப்பி ஓடினான் கண்ணன்.


"என்னடி லூசுக்கழுத.அவன் உன்கிட்ட நம்பிக்கையா ஒரு ரகசியம் சொன்னா இப்படித்தான் போட்டு ஓடக்கிறதா? என்ன நெனப்பான் உன்ன பத்தி!"

"ஓன்னும் நெனக்க மாட்டான்மா.நம்ம கண்ணந்தானேம்மா!ஆனா எப்படி ஓடினான் பாத்தியா?"

கல கலவென்று சிரித்தாலும் மனது ஏனோ வலித்தது நம் கமலாவிற்கு.

இரவு அப்பாவின் மடியில் அமர்ந்து சாய்வு நாற்காலியில் ஆடும்பொழுது மெதுவாக கேட்டாள்.

"அப்பா! நான் கறுப்பா பா?"


"சீ....இல்லடி செல்லம்!நீ......"ஆரம்பித்த அம்மாவினை தடுத்து நிறுத்தியது அப்பாவின் குரல்.

"ஆமாடா தங்கம்.நீ கறுப்பு..அழகான கறுப்பு.."

"கறுப்பு எப்படிப்பா அழகாகும்?"

"ஏன்? அழகுன்னா என்னடா?"

"அழகுன்னா எல்லொருக்கும் பிடிச்சிருக்கும்.அதான் அழகு. அரவிந்சாமி மாதிரி!!"

"அப்ப எல்லொருக்கும் ரஜினிகாந்த பிடிக்காதா?"

"ரஜினிகாந்தயும் பிடிக்கும்!! "

அப்பாவிடம் கமலாவிற்கு பிடித்தது இதுதான். தனது கருத்தை வெளிப்படையாக கூறமாட்டார்.அனால் கேள்விகள்,பதில்கள் மூலம் தான் கூற வந்ததை விளக்கிவிடுவார்.

"தோலின் வர்ணம்தான் அழகாடா?"

மீண்டும் அப்பா தொடர்ந்தார்.

"இல்லப்பா. ஆனா..".பதிலளிக்க முடியாமல் திக்கினாள் கமலா..

"ஆனா?"

"எல்லொருக்கும் செவப்புதாம்ப்பா பிடிக்குது.அம்மாகூட அந்த கல்யாணத்துல பொண்ணு நல்லா செவப்பா இருக்கானு தான சொன்னா?" குரல் கம்மச் சொன்னாள் கமலா.

"பூமி உருண்டையா தட்டையா டா?"

"உருண்டைப்பா. " எதற்காக கேட்கிறாரென்று தெரியாவிட்டாலும் பேச்சின் சூடு குறையாமலிருக்க உடனடியாக கூறினாள்.

"நீ இந்த பதில முன்னூறு வருசத்துக்கு முன்னாடி இங்கிலாந்துல சொல்லியிருந்தீன்னா உன்ன தெருவில் கம்பத்தில் கட்டி எறிச்சிருப்பாங்க!"

சட்டென்று புரிந்தது கமலாவிற்கு.ஆனாலும் பேச்சை வளர்ப்பதற்காக கேட்டாள்..

"அப்ப செகப்புதான் அழகுன்றது உண்மையில்லையாப்பா?"

"வெள்ளக்காரங்க இந்தியா வந்தப்ப கருப்பா இருக்கிற இந்தியர்கள ஆள்வது கடவுள் வெள்ளயர்களுக்கு கொடுத்த சும னு சொல்லி ஆண்டாங்க.அவங்கள வாயப்பிளந்து பாத்துட்டு இருந்ததால இன்ன வரக்கும் நாமும் அதயே உண்மைனு நம்பி வாழ்ந்து வாரோம்."

அப்பா கூறியது புரியாவிட்டாலும் மனதுக்கு இதமாக இருந்தது கமலாவிற்கு.நாளை கண்ணனிடம் இதனை விவாதிக்க வேண்டும் என முடிவு செய்துகொண்டாள்.

வருடங்கள் மீண்டும் ஓடின...வளர்ந்துவிட்ட காரணத்தினால், கிராமத்தின் மண்வாசனையும், மலைக்குன்றுகளும் இருவரையும் ஈர்க்கத்தவறின.

கண்ணனின் வாழ்க்கையில் முதல் காதல் தோல்வியுற்று அவனை துக்கத்திலாழ்த்தியது..இரண்டாம் காதல் வெற்றி பெற்று மிகவும் துக்கத்திலாழ்த்தியது.

கமலாவோ புத்தகங்களோடு வாழ்ந்தாள்.புதிது புதிதாக நிரம்ப கற்றுக்கொண்டாள்.பள்ளியிறுதித்தேர்வில் மாவட்டத்தில் முதலாவதாக வந்தாள். என்ன செய்யப் போகிறாய் என்று தந்தை கேட்டபொழுது சற்றும் யோசிக்காமல் பதிலளித்தாள்.

"மருத்துவம் பயிலப் போகிறேன்!"

"மிக்க நல்லது. நீ இங்கு பயில்வதைவிட அமெரிக்காவிற்கு போ. அங்கு நிரயக் கற்றுக்கொள்வாய்.."என்றார் அப்பா.

அமெரிக்கா செல்லுமுன்னர் விடைபெற்றுக்கொள்ள பாட்டி வீட்டிற்கு வந்தாள். விதியென்று கூறலாம்.இல்லை எதிர்பாராத இனிய நிகழ்வு என்றும் கூறலாம்.எவ்வாறாக எடுத்துக்கொண்டாலும் கமலாவிற்கு மிக்க மகிழ்ச்சி தந்தது அங்கே கண்ணனுடைய வரவு.இருவரும் வீட்டு முகப்பில் அமர்ந்திருந்தனர்.சொல்வதற்கும் கேட்பதற்கும் நிரம்ப இருந்தாலும், ஏனோ அந்நியப்பட்டுப் போகினர்.

கண்ணன் அப்பொழுது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். நகர வாழ்க்கையினாலும் கல்லூரிவாசமும் நிரம்ப கற்றுக் கொடுத்திருந்தன.தன்னைப்பற்றியும் உலகைப் பற்றியும் தெரிந்துகொள்ளத்துவங்கும் பருவத்தில் இருந்ததனால் மிகவும் அமைதியாக மாறி இருந்தான்.

மௌனம் போர்க்கொடி கட்டி சண்டைபிடிக்க துவங்கியது.அசௌகரியமாக உணர்ந்தனர். எங்கோ அலைமோதிக் கொண்டிருந்த கண்கள் மோதுகையில் கஷ்டப்பட்டு முறுவலித்தனர். கமலா தான் அந்நிலையை உடைத்தாள்.

"நகர வாழ்க்கை எப்படிடா இருக்கு கண்ணா?"

"நல்லாருக்கு கமலா.ரொம்ப வித்தியாசமா இருக்கு."

"லீவ் நாள்ல என்ன பண்ணுவ?"


"எங்கயாவது வெளில பார்கு,பீச்சு னு எல்லாரும் சேர்ந்து போவோம்.."

"எல்லாரும்னா?"

"எல்லாரும்னா கூட படிக்கிறவங்க எல்லாரும்.."

"பொண்ணுங்களுமா?"

"ஆமா!பொண்ணுங்களுந்தான்.!ஏன் கேட்குற?"

"இல்ல.சும்மாத்தான்!!"

இன்னும் பல சம்பந்தமில்லாத விசனங்கள் பேசி சிரித்தனர்..

"கிளம்புறேன் கண்ணா!" அவனை ஆழமாக பார்த்தாள்!

"சரி கமலா! நல்லா படி..முடிஞ்சா லெட்டர் போடு..உடம்ப பார்த்துக்க!"

மீண்டும் நாட்கள் ஓடின.முடிவாக அந்த நாள் வந்தது..அன்று கண்ணன் கல்லூரி விடுதியில் தொலைக்காட்சி அறையில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தான்.

"இன்னக்கி கமலா பிளைட் ஏறி இருப்பா.என்ன நினைச்சிட்டிருப்பா? பயப்படுவாளோ?சே சே!கமலாவாது பயப்படுவதாது?"

முக்கிய செய்தி!!அமெரிக்கா செல்லும் விமானம் இன்று இயந்திரக்கோளாறினால் வெடித்துச் சிதறியது. பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருப்பர் என்று அஞ்சப்படுகின்றது.

நினைவுக்குதிரையில் பறந்து கொண்டிருந்த கண்ணனை சொடுக்கென்று லகான் இழுக்கப்பட்டு நிறுத்தியது தொலைக்காட்சியில் வந்த செய்தி.மனதில் நூறு விமானங்கள் வெடித்துச் சிதறின.வெடித்த சிதறல்களெல்லாம் கண்ணாடித்துண்டுகளாக மாறின. அக் கண்ணாடித்துகள்கள் ஒவ்வொன்றிலும் கமலாவின் முகம் சிரித்தது..

அவசரம் அவசரமாக கமலாவின் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

"அங்கிள்! கமலா!.........."

"ம்ம்ம்............."

விம்மல் சத்தம் கேட்டது பின்னணியில்.ஆண்ட்டியாக இருக்கும்...

வலி,துக்கம், அழுகை எல்லாவற்றிற்கும் கண்ணன் உணர்வற்று, மரத்துப் போனான்.தன்னில் ஒரு முக்கியபகுதி அமைதியாக இறந்து போக கண்டான். அது போல் இன்னுமொரு பகுதி எங்கிருந்தோ தன்னில் வந்து அமர்ந்ததையும் உணர்ந்தான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக..தனித்துப் போனான்..ஓட்டினுள் ஒடுங்கும் ஆமை போல் மேலும் மேலும் தனக்குள்ளே ஒடுங்கிப் போனான்..

காலம் மீண்டும் சுழன்றது.கூடவே நமது கண்ணனும். நல்ல வேலையில் அமர்ந்தான். திரைகடலோடி திறை தேடினான். சமுகத்தின் பார்வையில் உயர்ந்தான். எங்கு சென்றாலும் மனிதர் சூழ்ந்தனர்.அவனின் நட்பு நாடினர். காதல்களும் தேடி வந்தன. ஆயினும்..நட்பு காட்டி பல்லிளித்த விகாரங்களை அடையாளம் கண்ட பொழுதும், பொய்யான காதல்களால் புண்பட்ட பொழுதும், உண்மையான உறவுகளுக்கு ஏங்கிய ஒவ்வொரு நொடியின் பொழுதும்....இழந்த இழப்பின் பரிமாணம் அவனை தாக்கியது. அன்றில் பறவையாக உணர்ந்தான். உயிரை மாய்த்துக் கொள்ளவோ அவனது பகுத்தறிவு இடம் தரவில்லை. அவனது நிலைக்கு அவனே தீர்வும் கண்டான். வாழும் வாழ்க்கையினை பிறப்பினால் ஏற்பட்ட கடமையாக எண்ணி வாழ முற்பட்டான். வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், மனிதர்கள் எதுவும் அவனை பாதிக்கவில்லை. ரயிலின் ஜன்னல் வழியே காட்சிகளை பார்த்து செல்லும் தனியான பயணி போல் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் ஓட்டாமல் மிதந்து சென்றான்.

"ஒரு நாளாகவேனும், ஒரு நொடியாகவேனும்..கமலாவை பார்க்க வேண்டும். இவ்வுலகை பற்றி நான் அறிந்ததெல்லாம் கூற வேண்டும்.என்னுள்ளே நான் புதைத்து வைத்த ரகசியங்களை, எனது வலிகளை,எனது அவமானங்களை அவளிடம் உரைக்க வேண்டும்.பின்னர் அவளுடனே அவளிருக்கும் உலகிற்கு சென்றுவிட வேண்டும்.."


இதுவே அவனது தீராத வேட்கையாயிருந்தது.மீண்டும் காலங்கள் ஓடின.கண்ணனிற்கு திருமணமாயிற்று. திருமணமாகிய முதல்நாள் இரவு அவனும் அவனது மனைவியும் ஒரு பெண்குழந்தையை தத்தெடுக்க வேண்டுமென்று முடிவுசெய்தனர். அதற்கான வழிமுறைகளை ஆலோசனை செய்த பொழுது அவன் மனைவி கேட்டாள்.

"குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?"

கண்ணன் தீர்க்கமாக பதிலளித்தான்.

"கமலா...."

முற்றும்..


Thursday, November 02, 2006

சொல்லடி சிவசக்தி!

பிணங்களை உண்டு வாழும் நரிக்கூட்டம் நடுவில் வாழ்கையில்,

நானும் பிணமாகமாட்டேனோ என்றெண்ணத் தோணுதடி!!

பொய்மையும் பசப்பும் நிறைந்த மாக்கள் கூட்டம் காண்கையில்,

குருடாகவேனும் வாழ நின்னிடம் மன்றாடத் தோணுதடி!!

பகுத்தறியென்றால் வெறுத்தோட்டங் காணும் ஆட்டுமந்தையில்,

இன்னுமொர் ஆடாகிப் போவேனோ என்றஞ்சத் தோணுதடி!!

சார்ந்தோரின் சாம்புதற்கிணங்கி துணைதேடி நிற்கையில்

மாண்ட காதல் பலவும் மனதில் வந்தோடுதடி!!

நின்னையொத்த பாவைதனை திசையெங்கும் தேடுகையில்

காணாமல் தோற்றேமாந்தது எந்தன் பிழையோடி!!

தூய்மையான காதலென நினைத்தது பொய்யாகக் காணுகையில்

வேற்கம்பினால் பிளந்தது போல் நெஞ்சு துடிக்குதடி!

நட்பினில் நேர்மையானது வழக்கொழிந்தே போகையில்

மனம் படும் பாட்டினை நீ அறிவாயோடி!!

ஊராரின் பிழைபலவற்றை மற்றவர் மறந்தே நிற்கையில்,

அவ்வாறியலாமல் நான் மட்டும் உழல்வதேனடி!!

மதமென்னும் புறைகட்டி மக்கள் பார்வையிழந்தே போகையில்,

அதம் செய்தே தர்மம் காத்திட நீ வருவாயோடி!!

முன்னேற்றங்கள் பல நிகழ்ந்தாலும் இன்னமும் சாதிச்சகதியில்

புரண்டே மகிழும் சமுகத்தை என்னதான் செய்வாயடி!!

சொல்லடி சிவசக்தி!

சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் நீ!!

Sunday, October 29, 2006

நீ இன்னொருவரை காதலிக்கிறாய் என்றவுடன்

இலக்கற்று போன மனதை தேற்றியதில்,

எவர் மீதும் குறை சுமத்தாமல்,குமையாமல்

காயமடையாமல், சோகம் மட்டுமே கொண்டதில்,

கொடுங்குளிர் வாடைக்காற்று முகத்திலறைய

அதன் உறையும் குளிர்தனில் உன் நினைவினை முகர்ந்ததில்,

நீ இல்லாத வாழ்க்கை கோடரியாக கிழித்த பொழுதும்

நெருஞ்சில் முள் தைத்த பாதமாக வாழக்கற்றுக் கொண்டதில்,

எந்த வித எதிர்பார்ப்பில்லாமல் காதலித்த மகிழ்ச்சியில்,

சிறுவனாகிய நான் வளர்ந்து மனிதனானேன்....

Saturday, July 29, 2006

ஒரு ஆலமரத்தின் கதை

டமார்!!

கொல்லை புறத்தில் இருந்து ஓரு பெரிய சத்தம்! மாடியில் தூங்கி கொண்டிருந்தவன் அதிர்ந்து எழுந்தேன். தொடர்ந்து திமு திமு வென்று ஆட்கள் ஓடி வரும் சத்தம்!மதிய வேளையில் இது என்ன புது கூத்து? யாரிவர்கள்? மாரிக்கால மழை போல மனம் பல கேள்விகளை பொழிந்தது. வாழ்வில் முக்கியமான கணங்கள் நிகழும் முன்னரே மனதிற்கு தெரிந்து விடுமாம்.ஏதொ பத்திரிக்கை ஒன்றில் படித்தது நினைவிற்கு வந்தது. அடுத்த சில கணங்கள் என் வாழ்வின் அதி முக்கியமான தருணங்கள் என்று என் மனம் சத்தியம் செய்யாத குறையாக அடித்து சொல்லியது. நல்லது! இந்த எண்ணவோட்டத்தை இன்றிரவு பதிவு செய்யவேண்டும். கடந்த மூன்று நாட்களாகவே எனது வாழ்க்கையானது விந்தையானதும் விளக்கங்களுக்கப்பாற்பட்டதுமான பல நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றது. நேற்று முந்தைய தினத்திலிருந்து பூமியானது ஒரு மிகப்பெரிய ஓளிப்போர்வையால் தன்னை மூடிக்கொண்டு காட்சியளிக்கின்றது.எங்கு பார்க்கிலும் ஓளி!அழகான, வெண்மையான,தூய்மையான ஓளி!மக்கள்,மரம்,செடி,கொடி அனைத்தையும் தன்னுள் அடக்கிக் காட்சியளிக்கும் பேரொளி! இவ்வாறு ஒரு கனவுலோகத்தில் வாழ்ந்து வந்தாலும், ஊர்மக்களின் போக்கில் எற்பட்ட மாற்றத்தை கவனிக்க தவறவில்லை நான். எனது வீட்டின் அருகே கடை வைத்திருக்கும் தோழர், வயலில் வேலை செய்யும் சகோதரர்கள், ஆசிரியர், அனைவரின் கண்களிலும் ஒரு மருட்சி. அனைவரும் என்னை சந்திப்பதை தவிர்பதற்காக அதீத முயற்சி எடுத்துக்கொண்டதையும் கவனித்தேன். சட சட வென பாத்திரங்கள் உருளும் சத்தம்! ஓடி வருபவரகள் யாராயினும், என் மனைவியின் கடுஞ்சொற்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டி இருக்குமென எண்ணியவாறே அவள் படுத்திருந்த இடத்தை நோக்கினேன்.அவளும் சத்தம் கேட்டு எழுந்து விட்டிருந்தாள்.காலத்திற்கு எதிரான போராட்டத்தில் நிமிர்ந்த நடை மற்றும், நேர் கொண்ட பார்வை, இவற்றை தொலைத்து, தள்ளாடியவாறு மழலை நடை போட்டுச் செல்லும் என் மனைவி!!எவ்வளவு வேகமாக செல்கிறது இந்தக் காலச்சக்கிரம்.!!மீண்டும் அவளை நோக்கினேன்.அட!இது என்ன? பார்வை மங்குகிறதே?இரத்த அழுத்தம் அதிகரித்திருக்குமோ? சிரசாசனம் செய்வதை வயலுக்கு மருந்தடிப்பதன் காரணமாக நிறுத்தி வைத்தது சரியில்லை..மீண்டும் தொடரவேண்டும்.ஆனால் இது இரத்த அழுத்தத்தால் மங்குவது போல் இல்லையே?சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்க்கிலும் காட்சிகள் கருப்பு வெள்ளையில் வர்ணமற்று தெரிந்தன.என்ன இது? புதிராக இருக்கிறதே!யோசித்துக் கொண்டிருக்கும் போதே வர்ணங்கள் திரும்பி வந்தன..அட!இது நான் படுத்திருந்த இடம் போல் இல்லையே! இது!இது!.....

காலச்சக்கிரமானது ஒரே சீரில் உருண்டோடி செல்வதால், நமது நினைவுகளை மனதில் கோர்வை படுத்தி வைத்து கொள்ள முடிகிறது.கனவுகளை பற்றி எப்பொழுதாவது எண்ணியதுண்டா நீங்கள்? கனவுகளில், காலமானது ஓரே சீரில் செல்வதுமில்லை. அவைகள் கோர்வையாக நிகழ்வதுமில்லை.ஆகவே தான் கனவுகள் உறக்க தேவதையின் காதலர்களாகவே இருந்து, விழிப்பு கணவன் வந்தவுடன் நினைவுகளிலிருந்து நீக்கப்படுகின்றன.என் கண் முன்னே நிகழும் இந்த கணமானது அவ்வாறு ஒரு கனவாகவே இருக்கக்வேண்டுமென்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். ஆயினும், மனம் அதனை நம்ப மறுத்தது.சுற்றிலும் பார்த்தேன். அழகான இந்த கண்ணாடிச் சாளரங்கள், அவற்றில் வரையப்பட்ட சித்திரங்களின் வர்ணங்களினூடே ஊடூருவும் ஓளி,அது நிகழ்த்தும் பொம்மலாட்டம்,மனதை கவரும் இந்த இன்னிசை, இவற்றையெல்லாம் முன்பு எங்கோ ரசித்திருப்பதாக தோன்றியது.ஆம்!இது என் திருமண நாள்! அதோ! நான் வருகின்றேன். இளமை தந்த செருக்கோடு, அதுவரை எனது வாழ்வின் அனுபவங்கள் பரிசளித்த முதிர்வு கைசேர்த்துக் கொள்ள, மனித உருவில் வந்த கடவுளர் போல், ஏறுநடை போட்டு வந்த என்னை பார்க்கின்றேன். என்னை அறியாமல், எனக்குள் ஒரு கர்வம் பிறக்கின்றது.அத்தோடு, மார்கழி மாதத்தை நினைக்கையில் அழையா விருந்தாளியாக வந்தமரும் அதிகாலைப பனி பற்றிய நினைவு போல், அப்பொழுதைய காலத்தைப் பற்றிய நினைவு வருகின்றது. அது...எங்கள் பாரத தேசமென்று நாங்கள் தோள் தட்டிய காலம். சமுக முற்போக்கு குறித்த கருத்துகள், அந்த சமயத்தில்தான் என் மனதில் துளிர்விட துவங்கி இருந்தன.அந்த பிரளயமான சமயத்தில்,அடுத்த நாளைப் பற்றி எதுவும் நிச்சயமாக தெரியாத அந்த தருணத்தில்,......நான் காதல் வயப்பட்டேன்.

என் மனதை கவர்ந்த அவள், ஒரு ஆசிரியை.அறிவிற் சிறந்த ஆசிரியை.பெண்கள் இப்படி வாழவேண்டும், அப்படி வாழவேண்டுமென்று தேசத்தில் அது வரை பிறந்த மரியாதைக்குரிய குடிமகன்கள், செய்வதற்கு வேலை இல்லாத ஒரே காரணத்தால்,எழுதி வைத்த கனம் பொருந்திய சட்டதிட்டங்களை பொருட்படுத்தாமல், மனித இனத்தின் பொது பிரதிநிதியாக வாழ முற்பட்ட என்னவளின் மீது எனக்கு காதல் ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை.இப்படியாக பலவாறு சிந்தனைகள் மனதில் ஒடிய வேளையில்,முதுகில் நறுக்கென்று கட்டெறும்பு கடித்தாற்போல் ஒரு வலி!அனிச்சையாக வலிவந்த இடத்தை தடவியவாறே, திரும்பி பார்த்தேன். முகத்தை திருப்பியவாறு என் காவியத்தின் நாயகி.ஆயினும்,அவள் இதழில் ஓடிய குறும்புன்னகை சாட்சியம் சொல்லியது,கிள்ளியது அவளென்று!!தேர்தல் பொழுதில்,அரசியல்வாதி அளிக்கும் வாக்குறுதி போல, எல்லா மதங்களூம்,மக்களுக்கு போதிக்கும் சொர்க்கத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.ஆயினும்,அப்படி ஒன்று இருந்தால், அது இந்த தருணத்தை விட மகிழ்ச்சியளிக்குமா என்பது சந்தேகமே!!தூரத்தில் நாய் ஓன்று குலைக்கும் சத்தம்!!ஆனால் இது என்ன?,அந்தச் சத்தமானது,நெருங்கிக் கொண்டே வருகிறதே!!.இது என்னுடைய நாயின் சத்தம் அல்லவா? சட்டென்று காட்சி மாறியது!! மீண்டும் என் படுக்கையறையில் இருந்தேன்.உண்மையாகவே எனது நாய் ஓடி வருபவர்களை நோக்கி குலைத்திருக்கிறது!!சற்றுமுன் நிகழ்ந்த காட்சியினை நினைத்தேன்.விழித்திருக்கும்போதே கனவுகள் வருகின்றனவே! விந்தை! விந்தை!!

தொம்மென்று பருத்த எதுவொ விழும் சத்தம்.ஓடிவருபவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும். ஏனிந்த அவசரம்?பார்த்து வரக்கூடாது? முகம் தெரியாக அந்த மனிதனை கடிந்து கொண்டேன்.கடிந்து கொண்டிருக்கும் பொழுதே காட்சிகள் வர்ணங்களை தொலைத்தன!சரிதான்..இப்பொழுது என்ன?எண்ணிக் கொண்டிருக்கும் போதே,மனதில் சருகில் பற்றிய நெருப்பு போல் கோபம் பெருக்கெடுத்து ஓடியது! மீண்டும் வர்ணங்கள் திரும்பி வந்தன.கண் முன்னே என் மனைவி.கோபத்துடன் ஏதோ சொல்கிறாள்.என்ன கூறுகிறாள் என்று கேட்போமா?

நீங்க போங்க ஐயா!!மவராசனா போயிட்டு வாங்க!நாட்டுக்காக போராடனும்னு போறிக! நல்ல விசயந்தேன்..ஆனா போகனும்னு நெனச்சவுக என்னய ஏன் கட்டிக்கிட்டிக?நீங்க பாட்டுக்கு நேதாஜி கூப்பிட்டாகனு போயிறுவீக! உங்களுக்காக தெனந்தெனம் அழுது சாக என்னால முடியாது சாமீ!அதுக்கு இப்பவே செத்து போறன்..உங்களுக்கும் பாரமில்லாம இருக்கும்..

என்ன தேவகி சொல்ற? நீ பேசர பேச்சா இது? என்னய விட நீதான நாடு நாடு னு துடியா துடிப்ப! இப்ப மாறிப் பேசுற? இது தான் சமயம் தேவகி.இப்ப நாம சேர்ந்து போராடுனா சொதந்திரம் கெடச்சிடும்னு போஸ் சொல்றாரு.வாழ்க்கையில எதாவது பண்ணனும் தேவகி!கூட்டத்தோடு கூட்டமா நாமும் பிறந்தோம்,வளர்ந்தோம்,செத்தோம்னு இருக்கிறது வாழ்க்கையா?ஆடும் மாடும் கூட அப்படித்தான் வாழுது..மனுஷனா பொறந்து என்ன பண்ணினோம்?

எல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கு! நடப்புக்கு சரிப்பட்டு வருமா? நான் புள்ளத்தாச்சி.போதாக்குறைக்கு அப்பா வேற!சண்ட வந்ததில இருந்து வேலயும் இப்பொவொ அப்பவோனு இருக்கு.ஆனா இதல்லாம் உங்களுக்கு பெரிசா? வீட்டுக்கு சண்ட போடுறதுல என்ன கௌரவம் இருக்கு? நாட்டுக்கு சண்ட போட்டாத்தான மரியாத!நீங்க போயிட்டு வாங்க சாமி!நான் கிறுக்கச்சி!ஏதோ ஒளரிக் கொட்டுறேன்.கேட்டுறாதிக!பொல்லாப்பாயிடப் போது!

என்ன தேவகி? ஒனக்கும் பிடிக்கும்னுதான கேட்டேன்.பிடிக்கலன்னு சொல்லிட்ட!நானும் போப்போறதில்ல..இதுக்கு போயி ஏன் கோவப்படுற?எல்லயில போட்டாத்தான் சண்டயா? உள்ள இருந்தே நம்மால முடிஞ்சத பண்ணலாம்!சரி விடு.நான் கம்மாய்க்கரய்க்கு போயிட்டு வாரேன்.மாமா வந்தாகன்னா இருக்க சொல்லு! இந்தா வந்திர்ரேன்..

என்று எளிதாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாலும், மனது கேட்க மறுத்தது.கம்மாய்க்கரையில் வைத்து அழுகின்றேன்.ஒரு வேளை திருமணம் செய்திருக்கக்கூடாதோ? அவளும் என்னைப் போலவே நாட்டின் மீது பற்றுடையவள் என்பதால் தானே காதலித்தேன்.தேசம் எங்கள் காதலை வளர்க்குமென்றல்லவா கனவு கண்டேன். இருள் கம்மிக் கொண்டு வந்தது.எனது மனதின் நிலையும் அது தானோ?

மீண்டும் விழித்தேன்.எனது படுக்கையறை தெரிந்தது!சரிதான்.இன்று கனவுகளின் தினம் போலிருக்கிறது!கீழ் வீட்டில் மனிதர்கள் ஓடும் சத்தம் இப்பொழுது இன்னும் பலமாகக் கேட்டது!காகம் ஒன்று கரையும் சத்தம்!கேட்டுக் கொண்டிருக்கும் போதே மீண்டும் கனவுலகிற்கு சென்றேன். அதே கம்மாய்க் கரை!அதோ!நான் அமர்ந்திருக்கின்றேன்.என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

நீ பண்றது சரியில்ல கந்தா!நீ நெனச்ச மாதிரி அவ இருந்தா மட்டும்தான் காதலிப்பேன்னு சொல்றது மகா தப்பு!அது காதல் இல்ல. அவள கட்டுக்குள்ள அடக்கி உன்னுடய சொத்தா உரிமை கொண்டாட நெனக்கிற! அவ முதல்ல ஒரு மனுசி, அவளுக்கும் நெறய ஆசாபாசம் இருக்கும்றத மறந்துடாத!! யாரும் யாரையும் மாற்றுவதற்கான கருவியில்ல காதல்.ஒருவரை சுதந்திரமாக வானில் பறக்க விட்டு அவங்க வளர்ச்சியில சந்தோஷபடுறதே காதல்.போயி அவகிட்ட முன்ன மாதிரி பழைய கந்தனா பழகு..

என்று என் மனம் எனக்கு சம்மட்டியடித்தது!சில நேரங்களில் சுழ்நிலைகளின் வெப்பத்தில் நாம் நம்மை மறந்து தீங்கு செய்ய துணிகின்றோம்.பின்னர் அத் தீமை வரைந்த வட்டத்தினை உடைத்து வெளிவர துணிவில்லாமல்,அதனுள்ளேயே புகைந்து, மருண்டு,செல்லரித்து,வாழ்க்கையின் அதிமுக்கிய நிமிடங்களை வீணடிக்கின்றோம்.சற்றே அமர்ந்து சிந்தனை செய்தோமானால், நாம் யாரென்று மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டொமேயானால்,வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களை மீண்டும் வலியுறுத்திக்கொண்டொமேயானால்,நமது துன்பங்ளின் மூலக்காரணம் புலப்படும்.பின்னர் அக்காரணத்தை விலக்க வழியும் புரியும்.நல்லது!இதனை நாளேட்டில் பதிய வேண்டும்!இத்தகைய சிந்தனாய்வு நடத்திய பின்னர்,மனம் இலகுவாகி,மீண்டும் மகிழ்ச்சி எனும் வானில் எழும்பியது.

காலடிச்சத்தம் இப்பொழுது படிக்கட்டில் கேட்கிறது!சற்றே திரும்பி சாளரத்தின் வழியாக கீழே பார்க்கின்றேன்.அதோ!படியில் முதலாவதாக ஏறி வருபவனின் உருவம் தெரிகிறது.யாரது! ராமசாமியின் மகன் போல் இருக்கிறானே? ஓடிவருபவர்களின் பருமனில்,படிக்கட்டு கிறிச்சிட்டது!நானே வடிவமைத்து பர்மாவில் இருந்து தேக்குமரம் வரவழைத்து செய்த படிக்கட்டு! நமது படைப்புகளை பார்க்கின்ற பொழுது நமக்கு வருகின்ற பெருமையுணர்ச்சிக்கு இருக்கிறது பாருங்கள்! அதற்கு ஈடு இணையே இல்லை! இந்த எண்ணம் முதலில் வந்ததா இல்லை எனது கனவு முதலில் வந்ததா என்று தெரியவில்லை.சரியாகச் சொல்லப் போனால், மனோவேகம் என்பார்களே! அந்த வேகத்தில், நான் எனது நிகழ்கால உலகத்தில் இருந்து கனவுலகிற்கு சென்று விட்டிருந்தேன்.

அதே படிக்கட்டின் நடுவில் ஒரு படியில் அமர்ந்து இருந்தேன்! எனக்கு கீழேயுள்ள மற்றொரு படிக்கட்டில்....இல்லை..இது இருக்கமுடியாது!எனது ஆத்மநண்பன் பைரவன் எப்படி இங்கே அமர்ந்திருக்கிறான்? சாதிக்கலவரத்தில், ஆட்கணக்கில் எண்ணம் குறைந்துவிடக்கூடாது என்கிற கரிசனத்தில்,வயோதிகனென்றும் பாராமல்,சென்ற வாரம் படுகொலை செய்யப்பட்டானே! அவன் புதையுண்ட இடத்தில் நான் வெகு நேரம் அழுதபடி நின்றது இப்பொழுதும் நினைவிலிருக்கிறதே!கண்ணிமைக்கும் நேரத்தில் கனவுலகும்,நிகழுலகும் ஒரு நூறாண்டுப் போர் நடத்தி முடித்தன! எப்பொழுதும் போல கனவுலகே வென்றது.பைரவனும் நானும் ஒரு விவாகப்போரில் ஈடுபட்டிருந்தோம்.

தோழர்! (பைரவன் என்னை அப்படித்தான் கூப்பிடுவான.இந்த பாழாய்ப்போன சாதியின் பெயரால் தலைமுறை தலைமுறையாக அடக்கி ஆளப்பட்டதின் விளைவாக,என்னை பெயர் சொல்லி கூப்பிடவே கூச்சப்பட்ட பைரவனை,தோழர் என்று அழைக்க வைக்க நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை!!) !நீங்க என்னதான் சொன்னாலும், ஊர எதுத்து இன்னோரு டீக்கடை வைக்கதுல எனக்கு உடன்பாடு இல்ல!காலம் காலமா ஊருக்குள்ள அமைதியா வாழ்ந்துட்டு வாறோம்.இப்ப எங்களுக்கு என்ன கெட்டுப் போச்சு!? நாங்க பாட்டுக்கு எங்க சோழிய பாக்கோம்.மேல்சாதிக்காரவுக அவுக சோழிய பாக்காக!அவக வழியில வராத வரைக்கும் படுக்க கூர, திங்க சோறுன்னு வாழ்க்கச்சக்கரம் ஓடுது.புரச்சி கிரச்சி னு எதும் பண்ணப் போயி இருக்கிற லங்கோடயும் பறி கொடுத்து அம்மணமா திரியச் சொல்லுதியளா? அப்படியேனாலும் செரட்டைல டீ குடிக்கதுக்கு என்ன வலிக்குதா?செரட்டைல குடிச்சா என்ன,கிளாஸ் தம்ளர்ல குடிச்சா என்ன?டீ டீதான தோழர்?

பைரவன்!பிரச்சன செரட்டைல டீ குடிக்கிறதுல இல்ல! உனக்கு செரட்டைல குடிக்கனும்னா தாராளமா குடி.தப்பில்ல.ஆனா அது உன்னோட சொந்த முடிவா இருக்கனும்.வெளில இருந்து யாரும் திணிக்க கூடாது.ஒரு சாதிக்கு கிளாஸ் டம்ளர், இன்னோரு சாதிக்கு செரட்டைல தர்றது எந்த விதத்துல நியாயம்?மனுஷன மனுஷன் மதிக்கிறதுதான் முதலாவது மனுஷத்தன்மை. அது கூட இல்லனா, என்ன அமைதியா வாழ்ந்து என்ன புரொசனம்?இத பிரிட்டிஷ்காரன் பண்ணலன்னுதான அவன எதுத்து போராடுனோம்.இப்ப நமக்குள்ளேயே இத்தன பிரிவு வச்சிக்கிட்டு பாகுபாடு பாத்தா அப்புறம் நமக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அப்புறமா இன்னொன்னு சொல்றேன்! தப்பா நெனக்காத!படுக்க கூர, திங்க சோறுனு வாழ்றது மனுச சாதி யில்ல.நி இப்படி வாழ்ந்தின்னா அப்புறம் மேல்சாதிக்காரன் அவன் பண்றத நியாயப்படுத்துவான்.நம்ம மேல மொதல்ல நமக்கு மதிப்பு வரனும்.இல்லாட்டி மத்தவங்க யாரும் மதிக்க மாட்டாங்க!

நீங்க சொல்றது சரிதாந் தோழர்! ஆனா அவுகள எதுத்து என்ன பண்ண முடியும்? ஊரே அவுக கைல தான் இருக்கு!நமக்கும் குழந்தை குட்டினு இருக்கு! சாகுற வரைக்கும் எதுத்து போராட முடியாதுல்ல தோழர்!

எதுத்து போராட இது போர் இல்ல பைரவன்.சாதின்றது அறியாமைனால விளையிற ஒரு நோய் மாதிரி! ஊரே கூடி முயலுக்கு மூனு கால்தான்னு முடிவு பண்ணி தலமுறை தலமுறையா சொல்லி கொடுத்தா, அப்புறமா அவங்க வழி வர்ற வாரிசுகள்லாம் முயலுக்கு நாலு கால்னு கண்ணால பார்த்தாலும் கூட அத நம்பாம,பார்க்கிற முயலுக்கு எல்லாம் ஒரு காலை வெட்ட பாப்பாங்க. அந்த கூத்துதான் இங்க நடக்குது. இதற்கு மருந்து ஆயுதமேந்தி போராடுறதுல இல்ல.அந்த மூடநம்பிக்கைகள எல்லாம் உடச்சி வாழ்ந்து காட்டுறது தான்.பிரச்சினைக்கு முடிவு அவங்க டீக்கடையை நொறுக்கிறதில்ல. அவங்க டீக்கடை நல்லபடியா நடக்கட்டும்.நாமளும் ஒரு டீக்கடை ஆரம்பிப்போம்.அதுல எல்லாருக்கும் ஒரே மாதிரி கிளாஸ்ல டீ தருவோம்.நம்மள பாத்து நெறய பேரு திருந்துவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.

கணநேரத்தில் என் படுக்கையில் இருந்தேன்!என்னதான் கனவென்றாலும், பைரவனை பார்த்த திருப்தி மனசெல்லாம் நிறைந்து நின்றது.காலடிச்சத்தங்கள் இப்பொழுது மாடி வாசலில் கேட்டன! வருபவர்கள் யாரென்று பார்க்க முயற்சி செய்தேன்.அதோ!அவர்கள் தெரிகின்றனர்..நான்கு பேர்! பார்ப்பதற்கு பதினேழு பதினெட்டு வயதினர் போல் தெரிந்தனர்.அனால், பார்த்த முகங்கள் போலில்லையே! வருபவர்களில் ஒருவனின் கையில் அரிவாள் ஒன்று மின்னியது.அந்த நிமிடத்தில், மனதில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டியது போல் அவர்கள் யாரேன்பதும், எதற்காக வந்திருக்கின்றனறென்றும் புரிய வந்தது.எனக்கு நானே மெல்ல சிரித்துக் கொண்டேன். இதுவரை எனக்கு ஏற்பட்ட புதிரான சம்பவங்களுக்கெல்லாம் விடை தெரிகின்றது.ஆனால் நான் சிரித்தது அதற்காக மட்டுமல்ல.

ஒருவன் எப்பேர்ப்பட்ட பணக்காரனாயினும் சரி, ஏழையாகினும் சரி, புண்ணியாவானாகினும் சரி, கொடியவனாகினும் சரி. மூப்படையும் காலத்தில் அவனுக்குள் ஒலிக்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா உங்களுக்கு? ' என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நான் இவ்வாறேல்லாம் வாழ்ந்து வந்தேன்.இதற்கு முற்றுப்புள்ளி எவ்வாறிருக்கும்?' என்பதுதான்.நானும் அவ்வாறு பல இரவுகள் முழித்திருந்து சிந்தித்திருக்கின்றேன்.நிலவினை மறைத்த மேகங்கள் போல இது வரை நிலவின் கதிர்களை மட்டுமே பார்த்து வந்தேன். ஆனால் இன்றொ மேகங்கள் விலகி முழுநிலா தெரிகின்றது.அதனை எண்ணி சிரித்தேன். கடைசியாக என் மகளை பார்க்க சென்ற பொழுது அவள் என்னிடம் 'உங்களுக்கு எங்கள விட கிராமம் முக்கியமாயிடுச்சாப்பா.உங்களுக்கு எதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா நாங்கள்லாம் என்ன செய்வோம்?' என்று கேட்க, அதற்கு பதில் தெரியாமல் அவளை விழித்துப் பார்த்தேன். இன்றோ அக்கேள்விக்கு என்னிடம் பதிலிருக்கிறது.ஆனால் அவளுக்கு தெரியப்படுத்த வழியில்லை.

வருபவர்களிடம் என் மனைவி ஏதோ கூறி தடுக்க முயலுகிறாள். அவனோ வந்த வேகத்தில் அவளை அருகிலுள்ள அறையினுள் தள்ளுகின்றான்.அவள் தடுமாறி உள்ளே விழுகிறாள்.ஓடிவருபவனை பார்க்கின்றேன்.என்னையறியாமல் என்னுள் ஒரு குற்றவுணர்ச்சி கிளம்புகின்றது. வாழ்வின் வசந்தங்களை, இன்பங்களை, மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டிய இள வயதில், இவனை ஆயுதமேந்தும் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதல்லவா எங்கள் தலைமுறை? வெறும் பேச்சளவோடு நின்று விட்ட சாதியொழிப்பு, பகுத்தறிவு போன்ற மேன்தொங்கிய கருத்துகளெல்லாம், சற்றுமேயானாலும் நடைவாழ்வில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமேயானால், இன்றைய இவனது கோபத்திற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்குமல்லவா?பச்சை மண்ணினைப் போல இருந்தவனை, சரியான வழியில் நெறிப்படுத்தவுமல்லவா தவறிவிட்டோம்!! மன்னித்து விடப்பா! உனக்கு வாய்த்திருக்க வேண்டிய அழகான எதிர்காலத்தினை, எங்கள் செயலின்மையால் செலவழித்துவிட்டோம்.இந்தக் கொடுமைகளெல்லாம் எங்களோடு போகட்டும். உங்கள் காலத்திலாவது, அன்பினால் மட்டுமே கட்டப்பட்ட சமுதாயத்தினை உருவாக்குங்கள்.

இவ்வாறாக யோசித்து, மன்னிப்பு கேட்கும் தோரணையில் வருபவனை நோக்கி நின்றிருந்தேன். அவன் செய்ய வரும் காரியமறிந்தும் பயமில்லாமல் அவனுக்காக காத்திருந்த என்னைக் கண்டு எனக்கே ஆச்சரியமாயிருந்தது.ஓடி வந்தவன் என் அருகே வந்ததும் தயங்கி நின்றான்.அவன் கண்களில் ஒரு மருட்சி! என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.அவனைப் பார்த்து முறுவலித்தேன்.இருவரின் கண்களும் ஒருகணம் சந்தித்தன. அந்த சந்திப்பில் அவனது வலி, துக்கம், அவமானம்,குழப்பம் எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டேன்.நான் அறிந்தேனென்பதை அவனும் உணர்ந்து கொண்டானென்று நினைக்கின்றேன்.அவனது கண்களில் சற்றே கண்ணீரைப் பார்த்தது போல் ஞாபகம்! பக்கத்திலிருந்தவன் எதோ கூற, அவனது கண்கள் மெதுவாக தரையினை நோக்கின. கையிலிருந்த அரிவாளினை
தடுமாற்றத்தோடு குறியில்லாமல் வீசுகின்றான். எனது வலக்கையினில் விழுகின்றது.அட! என்ன இது?..அரிவாள் வெட்டியும் வலிக்கவில்லையே! சுற்றிலும் ஓளியின் பிரகாசமானது அதிகரிக்கின்றதே? மனமானது மகிழ்ச்சியால் பூத்துக் குலுங்கியது.

எவ்வளவு அழகானது இந்த வாழ்க்கை?....

முற்றும்